Thursday, November 18, 2010

வினோதமான வலைப்பூக்கள்


விளையாட
57 விதமான விளையாட்டுகளை கொண்டுள்ளது இந்த வலைத்தளம். ஒவ்வொரு விளையாட்டும் வெவ்வேறு விதமான லாஜிக்குகளைக் கொண்டது.
Orisinal வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
மிகச் சிறிய வலைப்பூ
உலகிலேயே மிகச் சிறிய வலைப்பூ இது. ஒரு ஐகான் அளவே உள்ள இந்த வலைப்பூ, விளையாட்டை அடிப்படையாக கொண்டது.
guimp வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்
மிக நீளமான வலைப்பூ
18.939 கிலோ மீட்டர் அதாவது 11.77 மைல் நீளமான வலைப்பூ இது. உலகின் மிக நீளமான வலைப்பூ இது .
highest வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
சொடுக்காமல்
இந்த வலைப்பூவில் எந்த காரணத்திற்காகவும் சொடுக்க கூடாது. இப்படி உங்கள் மௌசை பயன்படுத்தாமல் மெயில் கூட அனுப்ப முடியும் என்கின்றார்கள்.
dontclick வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
வித்தியாசமான கூகுள் சர்ச்
இந்த தளம் விதவிதமான கூகுள் தேடுபொறிக்கான தீம்களை பெற்றுள்ளது. நமக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
இங்கு சொடுக்கவும்
சிறந்த தளங்களை கண்டறிய உதவும் தேடுபொறி
நீங்கள் கொடுக்கும் பிரிவில் சிறந்த பத்து தளங்களை வரிசைப் படுத்தி காட்டுகிறது.
இங்கு
அனிமேசன்
மிக அழகாக அனிமேசனுக்காக வடிவமைக்கப்பட்ட வலைப்பூ இது. இதன் நடுப்பகுதியில் ஓடிடும் உருவங்களை சொடுக்கிப் பாருங்கள். அதன் செய்கைகள் வினோதமாக இருக்கும்.
அனிமேசன் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
ஆன்லைன் மியூசியம்
மிக அரிய தளம் இது. உலகத்தில் இருக்கும் சிறந்த மியூசியங்களை இணையப்படுத்தி இருக்கின்றார்கள்.
coudal வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
குடும்பம்
நமது குடும்பத்தினைப் பற்றியும் முற்கால சந்ததியினரைப் பற்றியும் வருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ள உதவும் தளம்.
familysearch வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
2000 நகைச்சுவைகள்
2000 நகைச்சுவை துணுக்குகளைக் கொண்ட வலைப்பூ இது.
jokes2000 வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
பணத்தினை மடிக்கும் கலை
பணத்தினை வைத்துக் கொண்டு பல பொருள்கள் வாங்கிருப்பீர்கள்.என்றாவது மடித்து பார்த்து வித விதமாய் உருவங்களை உருவாக்கியிருக்கீர்களா. இந்த தளத்தைப் பார்த்த பின்பு கண்டிப்பாக நீங்கள் செய்து பார்ப்பீர்கள்.
foldmoney வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
Programmer or Killer?
இந்த இணையத்தில் காட்டப்படும் நபர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்கள் கொலைகாரர்களா மென்பொறியாளர்களா என கண்டுபிடிக்க வேண்டும். மிகவும் வினோதமான வலைப்பூ இது.
malevole வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
PhotoshopDisasters
புகைப்படங்களை விளையாட்டிற்காக மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள். கொஞ்சம் கூர்மையாக நோக்கினால் அவர்கள் செய்துள்ள குறும்புகள் தெரியவரும்.
photoshopdisasters வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

எல்லா மொழியிலும் எழுதலாம் எல்லா மொழியையும் படிக்கலாம்


கூகுளின் டிரான்சிலேட் பற்றி அறிந்து கொண்டதும் வியப்பாக இருந்தது. இத்தனை நாட்கள் தவறவிட்டமையை எண்ணி வருத்தம் கொண்டேன். உங்களுக்கு புரியாமல் இருக்கும் மொழியை காப்பி செய்திடுங்கள். பின்பு translate.google.comக்கு சென்று அங்கு, காலியாக இருக்கும் பெட்டியில் பேஸ்ட் செய்திடுங்கள். உடனே அது எந்த மொழியென்றும் அந்த மொழிக்கான ஆங்கில அர்த்தத்தினையும் அருகிலேயே காணலாம்.
அது மட்டுமல்லாமல், ரஷ்யன், ஐப்பான், சீனா என அந்தந்த நாடுகளின் மொழிகளால் எழுதப்பட்ட வலைப்பூவையும் ஆங்கிலத்தில் படிக்க முடியும். அதற்கு அந்த வலைதளத்தின் முகவரியை காப்பி செய்து translate.google.comக்கு சென்று உள்ளீடு செய்து translate என்ற பட்டனை அழுத்த வேண்டும் அவ்வளவுதான். இனி எல்லா மொழியினையும் நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
ரஷ்ய மொழியில்...

அதே தளம் ஆங்கிலத்தில்...

எல்லா மொழியையும் படிப்பதனைப் பற்றி பார்த்துவிட்டோம். இனி எழுதுவது பற்றி,.
நம் வலைப்பூவினை பார்த்ததும் நிறைய நண்பர்கள் கேட்கும் கேள்வி எப்படி தமிழில் எழுதுவது என்பதுதான். தமிழ் தட்டச்சுக்கென இருக்கும் மென்பொருள்களை சிபாசு செய்தால், அதனை பயன்படுத்துவதற்குள் அவர்கள் தமிழையே வெறுத்துவிடுகின்றனர். தமிழ் தட்டச்சு பழகுவது மிகவும் சிரமாக இருக்கிறது என்று கூறி மீண்டும் ஆங்கிலத்திற்கே சென்று விடுகின்றனர்.
இன்று கைப்பேசியில் கூட தமிழ் வந்துவிட்டாலும் அதனை பயன்படுத்துபவர்கள் வெகு குறைவு. இதற்கெல்லாம் காரணம், எல்லோரும் தங்கிலிஸ் என்ற புதுமொழியில் பழகிவிட்டனர். அம்மா என்பதை amma என்று எழுதியே பழக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வழியிலேயே தமிழில் எழுத google.com/transliteratel உதவி செய்கிறது. இங்கு சென்று தங்கிலிஸில் ஆங்கிலத்தினை தட்டச்சு செய்தால், தமிழ் மொழி கிடைத்துவிடும். படத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள இடத்தில் தமிழுக்கு பதிலாக மலையாளம், இந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளையும் தட்டச்சு செய்ய இயலும் என்றாலும் அந்தந்த மொழிகளின் அடிப்படை அறிவும் தேவை.

கூகுள் நிறுவனம் இந்த எளிமையான தமிழ் எழுதியை மின்னஞ்சல், ஆர்குட் என்று எல்லாவற்றிலும் புகுத்திவிட்டது உங்களுக்கு தெரி்ந்திருக்கும். மென்பொருளாக தரவிரக்கம் செய்யும் வசதியையும் இப்போது கூகுள் தந்திருக்கிறது.
அதற்கு, இங்கு சென்று கீழிருக்கும் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல, தமிழினை தேர்வு செய்துகொள்ளுங்கள். அடுத்து டவுன்லோட் பட்டனை தட்டி இன்ஸ்டால் செய்தால் போதும். இனி எங்கும் எதிலும் எளிதான தமிழ் தான்.

தமிழில் Firefox


இணையதள உலாவியான Firefox தற்போது தமிழ் மொழியில் உலாவியை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக தாய்மொழி அறிவு மட்டும் பெற்றிருக்கும் பலருக்கும் பயன்படும் வகையில் எல்லா நிறுவனங்களும் மாநில மொழிகளை தங்கள் படைப்புகளுடன் வெளியிடத் தொடங்கிவிட்டார்கள்.
எங்கும் தமிழ் -
சமூக இணைப்பு தளங்களான பேஸ்புக், ஆர்குட், டிவிட்டர் என எல்லாம் தமிழுக்கு முக்கியத்துவம் கொடு்த்து மாறியிருக்கின்றன. நோக்கியா போன்ற கைப்பேசி நிறுவனங்கள் முன்பே தமிழை அறிமுகப்படுத்திவிட்டன.

இணைய உலாவி -
இப்போது இணைய உலாவியும் தமிழில் வந்துவிட்டது. கோப்பு, சேவையாக்கு, நோக்குக, வரலாறு, புத்தகக்குறிகள், கருவிகள், உதவி என டூல்பாரில் தமிழை காணும் போது மகிழ்வாக இருக்கிறது. தமிழ் இனி மெல்ல சாகும் என வருத்தம் கொண்ட கவி இல்லையே, இருந்திருந்தால் பாடல் திருத்தப்பட்டிருக்கும்.

அதுமட்டுமின்றி, நகலேடுக்க, சாரத்தினை திறக்க, கருவிப்பட்டை, பக்கப்பட்டை என கணினி தமிழ் விளையாடுகிறது.
தரவிரக்க -
இந்த தமிழ் Firefox உலாவியை தரவிரக்க இங்கு சொடுக்கவும்.
மற்ற மொழிகளிலுள்ள Firefoxஇன் பதிப்புகள் எல்லாவற்றையும் இங்கே காணலாம்.

பாவேந்தர் பாரதிதாசன் புத்தகங்கள் – இலவச தரவிரக்கம்

பாரதிதாசனின் பாண்டியன் பரிசு தான், நான் முதன் முதலாக வாசித்த வரலாற்று நாவல். அதன் அழகு அவரின் எல்லா புத்தகங்களையும் வாசிக்க தூண்டியது.
இருண்ட வீடு அவரின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று. மொழி நடைமுதல் அந்த நாவலின் சூழல், கதாபாத்திரங்கள் என எல்லாவற்றிலும் வினோதம் இருக்கும்.
இளைஞர் இலக்கியம் முழுக்க முழுக்க எளிமையான பாடல்களைக் கொண்டது.

அழகின் சிரிப்பு புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
இளைஞர் இலக்கியம் புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
இசை அமுது புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
குடும்ப விளக்கு புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
பாண்டியன் பரிசு புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
தமிழச்சியின் கத்தி புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

இணையத்தில் இசைக் கருவிகளை இலவசமாக வாசிக்க

இசை இலவசம் -
இசைக் கருவிகளின் இலக்கணங்கள் இங்கே தேவையில்லை. விலையைப் பற்றிய கவலைகள் தேவையில்லை. நமக்கு இணையம் எனும் கடவுள் இருக்கிறார். இங்கு எல்லாம் இலவசமாகக் கிடைக்கின்றன.
இந்த இசை கருவிகளை இயக்க உங்களுக்கு தட்டச்சு கருவியும், கணினி எலியும் மட்டும் போதும். ஒரு சொடக்கில் இனிமையான இசை உங்களுக்குச் சொந்தம்.
கிடார் -

இசைக் கருவி கிடாரை (guitar) வாசிக்க இங்கே சொடுக்கவும்.
பியானோ –

இசைக் கருவி பியானோ (piano) வாசிக்க இங்கே சொடுக்கவும்.
டிரம்ஸ் -

இசைக் கருவி டிரம்ஸ் (drums) வாசிக்க இங்கே சொடுக்கவும்.
பேன் புலூட் –

இசைக் கருவி பேன் புலூட் (Pan flute) வாசிக்க இங்கே சொடுக்கவும்.
போன்கோஸ்-

இசைக் கருவி போன்கோஸ் (Bongos) வாசிக்க இங்கே சொடுக்கவும்.
கற் கருவிகள் -

கற்களால் ஆன இசைக் கருவி (Stone Musical Instruments) வாசிக்க இங்கே சொடுக்கவும்.
அனைத்து இசைக் கருவிகளையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்
இசை மென்பொருள் -
அனைத்து இசைக் கருவிகளின் தன்மையுடைய மென்பொருளை தரவிரக்கம் செய்ய
இங்கே
சொடுக்கவும்.

மதுரை வீரன் கதை

கருப்பு, ஐயனார் போல மதுரைவீரனும் பரவலாக எல்லோரும் வணங்கும் கடவுளாக இருக்கிறார். மதுரை வீரன் கதைப்பாடலும், மதுரைவீரன் கூத்தும் இந்தக் கதையை காலங்காலமாக மக்களிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. சரித்திரங்களை படங்களாக கொண்டு செல்லும் முயற்சியில் எம்.ஜி.ஆர் எடுத்து நடித்த படம் “மதுரைவீரன்”.
எல்லா தெய்வங்களைப் போல சாதிபாராமல் வணங்கினாலும், மதுரைவீரன் சத்திரியன் அல்ல, சக்கிலியன் என்று சொல்வோரும் உண்டு. ஆனால் கதைப் பாடல்களில் அரசனின் மகனாகவே மதுரைவீரன் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். தாழ்த்தப்பட்ட ஒருவனை தலைவனாக ஏற்றுக் கொள்ளாத மக்கள் இருக்கிறார்கள். கதையில் திரிபு ஏற்படுத்தி தந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. உண்மை எதுவென மதுரைவீரனை குலதெய்வமாக வணங்கும் நண்பர்கள் தான் சொல்லவேண்டும்.

கதை -
வாரணவாசி பாளையம் அரச குடும்பம், ராணிக்குக் குழந்தை பிறக்கிறது. ஆண் குழந்தை. சந்தோஷத்துடன் தமுக்கடித்து அறிவிக்கிறார்கள். ஆனால் ‘கொடி சுற்றிப் பிறந்திருக்கிற குழந்தையால் அரசுக்கும், குடிமக்களுக்கும் ஆபத்துவரும். அதனால் குழந்தையைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடவேண்டும்’ என்று சொல்கிறார் அங்குள்ள ஜோதிடர். ராணிக்குப் பிரிய மனமில்லை. மன்றாடிக் கெஞ்சுகிறார். இருந்தும், கதற கதறக் குழந்தையைப் பிரிக்கிறார்கள். கொண்டு போய் ஊர் எல்லையிலுள்ள காட்டில் விடுகிறார்கள் காவலர்கள்.
காட்டிற்குள் வந்த தாழ்த்தப்பட்ட ஜோடி அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறது. வீரன் என்று பெயரிடுகிறார்கள். என்னதான் திறமையிருந்தாலும், தன்னைத் தாழ்ந்த சாதி என்று சொல்லி ஒதுக்கும்போது கோபப்பட்டு எதிர்க்கிறான் வீரன். ஆற்றில் விழுந்த ராஜகுமாரியான பொம்மியைக் காப்பாற்றுகிறான். பிறகு அரண்மனையை விட்டுத் தள்ளி பொம்மி விரதம் இருக்கும்போது காவலுக்குப் போகிறான். காதல் உருவாகிறது. அரண்மனையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. வீரனைப்பிடித்து யானை மிதித்து சாகவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்கள். அந்த நேரத்தில் யானையில் வந்து காப்பாற்றுகிறாள் பொம்மி.
திரும்பவும் வீரனைப் பிடிக்க திருச்சி மன்னரின் படை உதவியைக் கேட்கிறார்கள். வீரன், பொம்மி இருவரையும் பிடித்து திருச்சி மன்னர்முன் நிறுத்துகிறார்கள். சாதியை ஒரு பொருட்டாக நினைக்காமல் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் மன்னர். கூடவே, தனது தளபதியாக்கி திருமலைமன்னரின் அழைப்பை ஏற்று மதுரைக்கு அனுப்புகிறார்.
திருடர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது மதுரை. அழகர் மலைப்பகுதியில் சங்கிலிக் கருப்பன் தலைமையில் ஒரு கொள்ளைக்கூட்டம். அதைப் பிடிப்பதற்கு முன்பு அரண்மனை நாட்டியப் பெண்ணான வெள்ளையம்மாள் வீட்டில் கொள்ளை. போய்த் தடுக்கிறான் வீரன். அந்த வேகம் வெள்ளையம்மாளின் மனதைக் கவர்கிறது. திருமலை மன்னரும் அவள் மேல் காதலுடன் இருக்கிறார். இதில் வீரன் தலையிடுவதை அவர் விரும்பவில்லை.
பத்து நாட்களுக்குள் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்கக் கெடு விதிக்கிறார். மாறு வேடத்துடன் கொள்ளையர்கள் தங்கியிருக்கிற இடத்தைச் சுற்றி வளைக்கிறான் வீரன். பல பொருட்களை மீட்கிறான். கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் மட்டும் தப்பிவிடுகிறான்.
பத்து நாட்களுக்கான கெடு முடியாத நிலையில், மீட்ட பொருட்களை மொத்தமாக அரசனிடம் ஒப்படைப்பதற்காக வீட்டில் வைத்திருக்கிறான். பௌர்ணமி அன்று வெள்ளையம்மாள் வீட்டுக்குப் போகிறான். அரசனின் நெருக்கடி தாங்கமாட்டாமல் தன்னைச் சாகடித்துக் கொள்ள தயாராகிறாள் வெள்ளையம்மாள். வீரன் தடுத்து அவளையும் மனைவியாக்கிக் கொள்கிறான்.
திருமலை மன்னருக்குக் கோபம். வீரனைக் கைது செய்கிறார்கள். விசாரணை நடக்கிறது. திருடர்களுக்கு வீரன் உதவியாக இருந்ததாக பொய்க் குற்றம் சுமத்தப்படுகிறது. வாதாடுகிறான் வீரன். பலனில்லை. மாறு கை, மாறு கால் வாங்க உத்தரவிடுகிறார்கள்.
மாட்டு வண்டியில் கட்டிய நிலையில் வீரனைக் கொண்டு போகிறார்கள். அதற்குள் மன்னனிடம் போய்ச் சண்டையிடுகிறாள் வெள்ளையம்மாள். மன்றாடுகிறாள் பலனில்லை. கடைசியில் மனம் மாறி, கொலைக்களத்திற்குப் போகிறார் மன்னர்.
அதற்குள் கொலைக்களப் பீடத்தின் மீது நிறுத்தி மாறுகை மாறுகால் வாங்கி விடுகிறார்கள். துடிதுடித்து வீரன் உயிர் துறந்ததும், அவனது மனைவிகளான பொம்மியும், வெள்ளையம்மாளும் கூடவே விழுந்து உயிர்துறக்கிறார்கள்.

தினமலர்

தினமலர் நாளிதலில் வெளிவரும் சிறுவர் மலர், வாரமலர், கம்பியூட்டர் மலர் புத்தகங்களை மென்நூல் வடிவில் தருகின்றார்கள். ஆர்வம் உள்ளவர்கள் இங்கே சொடுக்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

முத்துப்பட்டன் கதை

கேரளத்தில் நெடுமங்காடு அருகே உள்ள ஆரியநாடு செழிப்புடைய நாடு. அந்த நாட்டில் பிராமணச் சாதியைச் சார்ந்த ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் கடைசியாகப் பிறந்தவன் முத்துப்பட்டன். அவன் நல்ல உடல் வலிமை உடையவன். போர்க்கலைகளைப் படித்தவன். வாள் யுத்தத்தில் வல்லவன்.
ஒருமுறை முத்துப்பட்டனுக்கும் அவனது சகோதரர்களுக்கம் இடையே மாறுபாடு வந்தது. அதனால் முத்துப்பட்டன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டே புறப்பட்டுவிட்டான். காடு மலைகள் எல்லாம் அலைந்தான். கொட்டாரக்கரை என்ற ஊருக்கு வந்தான். கொட்டாரக்கரையில் அப்போது அரசனாயிருந்தவன் பெயர் ராமராசன். அந்த அரசன் முத்துப்பட்டனைத் தன் பாதுகாப்பு படைவீரனாக வைத்துக்கொண்டான். பல சிறப்புகள் அவனுக்குச் செய்தான்.
முத்துப்பட்டன் அண்ணன்மார்கள் தம்பியைத் தேடி ஒவ்வொரு ஊராக வந்தார்கள். கொட்டாரக்கரைக்கும் வந்தனர். அங்கு பவிசோடு இருந்த தம்பியைக் கண்டனர். ‘ ‘தம்பி! எங்கள் தவறுகளை மன்னித்துவிடு. சேஷையர் மகளை உனக்குப் பேசி முடித்திருக்கிறோம். நீ சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டாயே, எங்களுடன் வீட்டுக்கு வா ‘ ‘ என்றனர். முத்துப்பட்டனோ ‘ ‘நான் இப்போது ராமராசனின் சேவகன். அவரிடம் உத்தரவு கேளுங்கள். வருகிறேன் ‘ ‘ என்றான். அண்ணன்மார்கள் ராமராசரிடம் தம்பியை அழைத்துச் செல்ல அனுமதி கேட்டனர். ராமராசனும் மகிழ்ந்து அனுமதியும் கொடுத்தார். முத்துப்பட்டனுக்கும் பரிசுகளும் கொடுத்தனர்.
முத்துப்பட்டன் அண்ணன்மார்களுடன் ஆரியங்காவு காட்டு வழியே தன் ஊருக்குச் சென்றான். வழியில் அரசடித்துறை என்ற இடத்தில் தங்கினார்கள். முத்துப்பட்டன் ‘ ‘நான் இங்கு கொஞ்ச நேரம் இருந்து வருகிறேன், நீங்கள் வேண்டுமானால் செல்லுங்கள் ‘ ‘ என்றான். அண்ணன்மார்கள் அவனது பொருளுக்கு ஆசைப்பட்டு அவனை அங்கேயே விட்டுவிட்டு சுமையுடன் நடந்தார்கள்.
முத்துப்பட்டன் அந்தப் பாறையில் கண் அயர்ந்த நேரம் மெல்லிய குரலில் யாரோ பாடுவதைக் கேட்டான். திரும்பிப் பார்த்தான். இரண்டு பெண்கள் ஒரு நாயுடன் வருவதைக் கண்டான். அழகான பெண்களின் அருகே சென்றான்.

அப்பெண்களிடம் ‘ ‘இனிய குரல் வளமும் அழகிய அழகும் பொருந்திய பெண்களே! உங்கள் அழகு என்னை மயக்குகிறது. என் தாபத்தைத் தீருங்கள் ‘ ‘ என்றான்.
அந்தப் பெண்களோ ‘ ‘என்ன அநியாயம் இது. நாங்கள் சக்கிலியப் பெண்கள். நீரோ பிராமணச் சாதியினர். இதை நீர் கேட்கவே கூடாது ‘ ‘ என்றனர்.
முத்துப்பட்டன் அவர்களிடம் ‘ ‘நீங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியாது. உங்களுக்காக நான் எல்லா உறவுகளையும் விட்டிவிட்டு இங்கேயே தங்கத் தயாராக இருக்கிறேன் . என்னை அணைத்துக்கொள்ளுங்கள் ‘ ‘ என்றான். அவர்கள் அஞ்சி ஓடினர். முத்துப்பட்டன் அவர்களைத் துரத்தினான். அவர்கள் காட்டுமரங்களுக்குள் நுழைந்து ஓடினர். பட்டன் விடவில்லை. அப்பெண்களோ குறுக்கு வழியே போய் தந்தையை அடைந்தனர். காட்டில் ஓடமுடியாத பட்டன் நின்றுவிட்டான்
தந்தையிடம் ‘ ‘தந்தையே எங்களை ஒரு பட்டன் துரத்தி வருகிறான் ‘ ‘ என்றனர். தந்தையான பகடை ‘ ‘இப்போதே அப்பாதகனைக் கொன்று வருகிறேன் ‘ ‘ என்று கூறி வல்லயத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
பகடை காட்டுவழியே வரும்போது பட்டன் காட்டுச் செடிகளுக்கிடையே கிடந்தான். பகடை அழகொளிரக் கிடக்கும் பட்டனைப் பார்த்து ‘ ‘ஐயோ இத்தனை அழகான இளைஞன் யாரோ ? இவன் தந்தை யாரோ என எண்ணினான். சிறிய கல்லை அவன் மேல் விட்டெறிந்தான். பட்டன் விழித்தான். சக்கிலியனைப் பார்த்தான். ‘ ‘ நீர் யார் ? ‘ ‘ எனக் கேட்டான்.
சக்கிலியன் ‘ ‘என் பேர் பகடை. என் புதல்விகள் பொம்மக்காவும் திம்மக்காவும் இந்தக் காட்டுவழியே வரும்போது ஒரு பட்டன் அவர்களை மோசம் செய்ய வந்திருக்கிறான். அவனைக் கண்டதுண்டமாக வெட்டி காட்டு நரிகளுக்குப் போட வந்தேன் ‘ ‘ என்றான்.
அதைக் கேட்ட பட்டன் புலம்ப ஆரம்பித்தான். ‘ ‘ ஐயோ மாமனாரே, உன் மக்களுக்காக ஆசைப்பட்டது நான்தான். உன் பெண்களுக்காக உடன் பிறந்தவர்களை வெறுத்து நிற்கிறேன். நாலுபேர் அறிய உன் பெண்களை மணம் செய்துகொள்ளுகிறேன் ‘ ‘ என்றான்.
பகடையோ ‘ ‘ஐயோ நான் சக்கிலியன். நாய் சாதி. என்னை நீங்கள் தீண்டமுடியுமா ? நாங்கள் செத்த மாட்டைத் தின்பாம். சேரியில் வாழ்வோம். தோலை அழுகு வைப்போம். மாடு அறுப்போம். சாராயம் குடிப்போம். இது வேண்டாம் அந்தணரே ‘ ‘ என்றான்.
பட்டனோ ‘ ‘மாமனே சொல்வதைக் கேள், புண்ணியம் உண்டு. உன் மக்களை எனக்கு மணம் செய்து வை. உன் ஜாதியில் நான் இணைந்துவிடுகிறேன் ‘ ‘ என்றான்.
பகடை ‘ ‘எங்களைப்போல் நீயும் தோல் செருப்பு அணிந்து பூ நூல் அறுத்து குடுமி இல்லாமல் இருந்தால் என் மக்களை உனக்குத் தருகிறேன். நீ உன் தமயன்மார்களிடம் இதைச் சொல்லி வரவேண்டும் ‘ ‘ என்றான்.
முத்துப்பட்டன் சக்கிலியன் பேச்சுக்குச் சம்மதித்தான். தன் அண்ணன்மார்களைத் தேடிச் சென்றான். அவர்கள் விக்கிரமசிங்கபுரம் அக்கிரகாரத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்றான். தான் ஒரு சக்கிலியனின் புதல்விகளை மணம் செய்யப் போவதைச் சொல்லி அனுமதி கேட்டான். அண்ணன்மார்கள் ‘ ‘உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா ? ‘ ‘ என்று கேட்டு பொங்கி எழுந்தனர். பலவாறாக நயந்தும் பயந்தும் சொல்லிப்பேர்த்தனர். பட்டன் கேட்கவில்லை. பட்டனைப் பெரிய அறையில் அடைத்து வைத்தனர்.
முத்துப்பட்டனோ நில அறைக்கல்லைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வந்தான். விக்கிரமபுரச் சந்தையில் தோல் செருப்பு தைத்துக்கொண்டான். பூநூலை அறுத்தான். குடுமியைக் களைந்தான். பகடையின் வீட்டிற்கு வந்தான்.
பகடை வேறுவழியில்லாமல் திருமணத்திற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான். தன் ஜாதிச் சனங்களை வரவழைத்தான். பெரிய பந்தலிட்டான். வாழைக்குலை நாட்டினான். பெரிய மணவறை செய்தான். பட்டனுக்குத் தன் மகளைக் கொடுத்தான். திருமணம் இனிதே நடந்தது. பொம்மக்காளும் திம்மக்காளும் சாதி முறைப்படி பட்டனுக்கு சாப்பாடு கொண்டு வைத்தனர். தன் பங்கு மாடுகன்றுகளுடன் முத்துப்பட்டன் சக்கிலிய குடியில் வாழவந்தான்.
திருமணம் முடிந்ததும் சக்கிலியப் பெண்கள் கும்மி அடித்தனர். அவர்களுடன் சேர்ந்து முத்துப்பட்டனும் கும்மியை ரசித்தான். கும்மி முடிந்ததும் பட்டன் பொம்மக்கா மடியில் தலையையும் திம்மக்கா மடியில் காலையும் வைத்து உறஙகினான். உறஙகும்போது தன் கையில் கட்டிய காப்பு நூலைக் கரையான் அரிக்கவும், உடம்பு கெட்டுப்படவும், கோழிக்கூட்டிலிருந்து வரவும் கனவு கண்டான்.
அந்த வேளையில் ஒரு தொப்பி ஆள் வந்தான். ‘ ‘அண்ணே முத்துப்பட்டா உங்கள் கிடை மாடுகளை வன்னியர் கொண்டு போகிறார்கள் ‘ ‘ என்றான். பட்டன் சினத்தோடு எழுந்தான். ‘ என் மாடுகளைத் திருடிய ‘வன்னியரையும் உப்பளங்கோட்டை மறவர்களையும் இப்பொழுதே அழிக்கிறேன் ‘ ‘ எனக் கூறிப் புறப்பட்டான்.
முத்துப்பட்டனை அவன் மனைவிகள் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று சொல்லி தடுத்தனர். பட்டனோ அவர்களை வகை வைக்கவில்லை. மனைவிகள் வளர்த்த பூச்சி நாயை துணைக்கு அழைத்துக்கொண்டு வன்னியர்களை எதிர்க்கச் சென்றான். அவர்களுடன் போரிட்டு எல்லோரையும் வெட்டி வீழ்த்தி மாடுகளை மீட்டான். பின்னர் உடம்பில் பட்ட குருதியை ஒரு சுனையில் கழுவச் சென்றான்.
அப்போது ஏற்கனவே ஏற்பாடுசெய்திருந்தபடி சப்பாணி ஒருவன் பின்னாலிருந்து பட்டனைக் குத்திக் கொன்றுவிட்டான். பட்டன் இறந்ததைப் பார்த்து பூச்சி நாய் சக்கிலியனின் வீட்டிற்கு ஓடி பொம்மக்கா திம்மக்காவை பிடித்து இழுத்தது. பொம்மக்காவும் திம்மக்காவும் பட்டனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்பதை உணர்ந்து சாதமும் கறியும் எடுத்துக்கொண்டு நாயின் பின்னால் சென்றனர்.
பட்டன் இறந்துகிடந்த இடத்திற்கு அவர்கள் வந்தனர். இறந்த கணவனைப் பார்த்ததும் அலறிப் புலம்பி சட்டியை எறிந்துவிட்டு அவன் மேலே விழுந்து அழுதனர். பட்டனை எடுத்தத் தோள் மேல் போட்டுக்கொண்டு சிங்கம்பட்டி அரண்மனைக்குச் சென்றனர். அரசனிடம் தங்கள் வரலாற்றைக் கூறி தாங்கள் பட்டனுடன் தீயிலே இறக்க அனுமதி கேட்டனர். பழிபாவம் ஏற்படும் என்று மன்னன் மறுத்துப் பார்த்தான். பெண்கள் ஒரேயடியாய் கெஞ்சினர்.
அவர்கள் கற்பின் உறுதியைக் கண்ட மன்னன் பெரும் தீ வளர்க்க உதவினான். அத்தீயில் இருவரும் பாய்ந்து உயிரை விட்டனர். அவர்கல் கதையை கேட்ட ஊரார் அவர்கள் தெய்வங்களாகி விட்டதை அறிந்தனர். மன்னன் அவர்களுக்கு கோயில் எடுப்பித்து பலியும் பூசனையும் செய்வித்தான். அவர்கள் தெய்வங்களாகி அருள் புரிந்தனர்.

சுடலை மாடன் கதை

1)
சுடுகாட்டில் வாழும் தெய்வம் என்பதால் “சுடலை” என்றும் மாட்டை வாகனமாகக் கொண்டதால் “மாடன் என்றும் வழங்கி, அவ்விரண்டும் இணைந்து “சுடலைமாடன்” என்ற பெயர் உருவானது. சிவனை சுடலை எனவும், சுடலைமாடன் எனவும் குறிப்பிடுவதுண்டு. சுடலைமாடனை சிவ அம்சமாகவே சைவர்கள் பார்க்கின்றார்கள்.
பார்வதி சிவனிடம் “தனக்கு ஆண்பிள்ளை வரம் வேண்டும்” என்று கேட்கின்றாள். சிவன் கைலாயத்தில் உள்ள முப்பத்தி இரண்டாம் தூணில் எரிகின்ற மணிவிளக்குகளில் முந்தானையை ஏந்தி நிற்குமாறு கூறுகிறான். அவ்வாறே பார்வதியும் விளக்கின் கீழ் முந்தானை ஏந்தி நிற்க, பரம சிவன் அந்த விளக்கின் சுடரை தூண்டிவிட முந்தானையில் அந்தச் சுடர் தெறித்து விழுகிறது. அந்த சுடர் வெறும் முண்டமாக இருப்பதைக் கண்ட பார்வதி பயந்து தன் கணவனிடம் கூறுகிறாள். சிவன் அந்த முண்டத்தினைத் தலையுள்ள குழந்தையாக உருவாக்குகிறான்.
அந்தக் குழந்தையை அன்போடு வளர்த்து வருகின்றனர். ஆனால் அந்தக் குழந்தை இரவில் சுடலைக்கு சென்று பிணங்களைத் தின்கிறது. அதைக் கண்ட பார்வதியும் சிவனும், அந்தக் குழந்தையை பூமிக்கு அனுப்பி விடுகின்றனர். குழந்தை சுடலையிலேயே தங்கி பிணங்களை தின்று வளர்கிறது. வாலிபம் அடைந்ததும், சுடலைக்கு பெண் தேவைப்படுகிறாள். பூலோகத்தில் இருக்கும் பெண்கள் யாரும் வேண்டாமென சிவனிடம் சென்று தனக்கு ஒரு பெண்துணை வேண்டுமென கேட்கின்றான். சிவனும் இசைந்து சுடலைமாடத்தியை உருவாக்கி கொடுக்கிறான்.
சிவன், சுடலை மாடனின் வெறியைத் தணிக்க இருவருக்கும் கொடை கொடுக்கின்றனர். அந்த விழாவில் இந்திராணியின் நடனம் நடைபெறுகிறது. சுடலை மாடன் ரத்தபலியும், மகுடச் சத்தமும் கேட்கிறான். இந்திராணியின் காற்சிலம்பின் பரல் தெறித்து விழ கணியான் பிறக்கிறான்.
சுடலை மாடனுக்காக மகுடம் வாசித்து, ஆடி, நரபலிக்கு பதிலாக நாக்கை வெட்டி ரத்தம் கொடுக்கிறான். பின்னர் சுடலைமாடன் , சுடலைமாடத்தியோடு பல வழிகளைக் கடந்து கன்னியாகுமரி வந்தடைகிறான்.
அங்கு இருக்கும் பகவதியிடம் தன் நிலையை விளக்கத் தனது காவலுக்கு அவனை வைத்துக் கொள்கிறாள் பகவதி. சில நாள்கள் கழித்து மலையாள தேசம் செல்ல விருப்பம் தெரிவிக்கிறான் சுடலை. மலையாளத்தில் உள்ள மாந்திரீகத் தன்மைகளை விளக்கி, ”அங்கு செல்வது ஆபத்து. எனவே நீ போகக் கூடாது” என்று தடுக்கிறாள் பகவதி. அதை மறுத்த சுடலை, ஆண்டிக்கோலத்தில் காளிப்புலையன், அவன் மகள் மாஇசக்கி வருகிற ஊருக்குச் செல்கிறான். அந்த ஊருக்கு வந்து சுடலைப் பாம்புகளை ஆட்டி வைத்து வேடிக்கை காட்டுகிறான். மாஇசக்கி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எனவே, பிச்சைக்காரனாக வேடம் ஏற்று வீடுவீடாகச் சென்று பிச்சை கேட்கிறான். மாஇசக்கி வீட்டிற்குச் சென்று, தான் அவளைக் கற்பழிக்கப் போவதாக சபதம் ஏற்கிறான்.
மாஇசக்கியைக் கற்பழிக்கப் போவதாக சபதம் ஏற்ற சுடலைமாடன் அன்றிரவு பல்லியின் வடிவில் அவளைக் கற்பழிக்கிறான். அதைத் தன் தந்தையிடம் முறையிடுகிறாள் மாஇசக்கி. அவள் தந்தை காளிப்புலையன் மை போட்டுப் பார்க்கிறான். ஆனால், அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுடலை இதை பகவதியிடம் கூறுகிறான். பின்னர் பகவதி அவனை மன்னித்துக் காவலைத் தொடரும்படி சொல்கிறாள்.
காக்காச்சி மலையில் நான்கு பளியர்கள் பயிரிட்டு வருகின்றனர். புழுவாக வடிவம் கொண்டு சுடலை, அப் பயிர்களை அழிக்கிறான். காளிப்புலையன் மீண்டும் மை போட்டுப் பார்க்கிறான். இதற்கெல்லாம் காரணம் சுடலைமாடன்தான் என்பதை அறிகிறான். மாடன் கோபம் கொண்டதாலேயே இப்படியான அழிவுச் செயல்களைச் செய்கிறான் என்று உணர்ந்து மாடனுக்குக் கொடைவிழா எடுக்க முன் வருகின்றனர்.மாடன் காளிப்புலையனின் மகள் சூலியை பலி கேட்கிறான். காளிப்புலையன் முதலில் மறுத்தாலும் பின்னர் அவளை சுடலைமாடனுக்குப் பலி கொடுக்கிறான். பின்னர் ஒரு யானையைப் பலியாகக் கேட்கிறான் சுடலை. பட்டத்து யானையைத் திருடிக் கொண்டு வந்து புலையன் பலியிடுகிறான்.
பட்டத்து யானை காணாமல் போகவே அதைக் கொண்டு சென்றவன் காளிப்புலையன் என்பதை அறிந்த மன்னன் அவனைப் பலியிடுகிறான். அந்த பலியையும் சுடலைமாடன் ஏற்றுக் கொள்கிறான். அங்கிருந்து சொரிமுத்தையன் கோயிலுக்கு வந்து ஐயனோடு சம்போடைக்குப் போகிறான். அங்கு ஆரிய சாம்பன் மகள் ஓடைக்குக் குளிக்கப் போகிறாள். இதைக் கண்ட மாடன் மீன் வடிவில் ஓடையில் சென்று அந்தப் பெண்ணோடு கூடுகிறான். அவள் உடல் நலம் குன்றவே மாடனுக்குப் பூசை செய்கின்றனர். அந்தப் பூசையையும் பெற்றுக் கொள்கிறான்.
அங்கிருந்து கல்லிடைக்குறிச்சிக்குச் செல்கிறான் மாடன். அவ்வூர் அருகில் உள்ள பொன்னிட்டாங்கயத்தில் மீனாகத் துள்ளினான் மாடன். நாடார்கள் மரம் வெட்ட வருகின்றனர். அங்கு மீன் துள்ளிக் கொண்டிருப்பதைக் கண்ட மரம் வெட்டிகள் அந்த மீனைப் பிடித்து வெட்டி பங்கு வைக்கிறார்கள். அவர்கள் வைக்கும் பங்கு குறைந்து கொண்டே இருப்பதைக் கண்ட நாடார்கள், ‘இது மாடனுடைய வேலையே’ என்று அஞ்சி ஓடுகின்றனர். அவர்களுள் பலரை பலி எடுத்துக் கொள்கிறான் மாடன். மிஞ்சியவர்கள் பயந்துபோய்ச் சுடலை மாடனுக்குக் கோயில் எழுப்புகின்றனர். அங்கிருந்து சொரிமுத்தையன் கோயில் வன்னிமரத்தில் குடியேறுகிறான் சுடலைமாடன்.
திருச்செந்தூர் கோயிலுக்குக் கொடிமரம் செய்வதற்கு ஆசாரிகள் காட்டுக்குப் போகிறார்கள். அப்போது சகுனத் தடைகள் பல ஏற்படுகின்றன. இருப்பினும் மாடன் குடியிருக்கும் வன்னிமரத்தைச் சிலர் வெட்டுகின்றனர். அவர்களைப் பலி கொள்கிறான் மாடன். சிலரை சொரிமுத்தையன் காப்பாற்றுகிறான். பயந்து போன மக்கள் மாடனுக்குத் திருச்செந்தூரில் பூசை செய்கின்றனர். அந்தப் பூசையை ஏற்றுக் கொண்ட மாடன் அவர்களுக்குப் பயனளித்து வருகிறான்.

2)
சுடலை ஆண்டவர் கதை – அன்று ஒருநாளில் புனிதமான கைலாச பார்வதத்தில், உலகையே கட்டி காக்கின்ற சிவனும் பார்வதியும் இடவலமாக வீற்றிருந்தார்கள். அங்கு மேலும் தேவர்கள், ரிஷிமார்கள், கம்போவர்கள், கணநாதர்கள், சாரணர்கள், சித்தர்கள் என கைலாசதிற்கானவர்களும் அங்கு இருந்தனர்.
உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும், எந்த உயிருக்கு எவ்வளவு என தெரிந்து, அறிந்து உணவளிப்பதும், ஈசனகிய சிவனின் பணிகளில் ஓன்று. அவ்வாறே அன்றும் பார்வதி தேவியிடம் ஈசன், நான் பூலோகம் சென்று அனைத்து உயிர்களுக்கும் அவைகளின் பிரவிப்பயனின் படியான கணக்குப்படி உணவளித்து வருகிறேன் என கூறி பூலோகம் சென்றார்.
பூலோகத்தில் ஈசன், எறும்பு முதல் யானைவரையிலும், உருவாகுகிற திசு முதல் வயிற்றிலிருக்கும் சிசு வரையிலும் எவற்றிற்கும் குறைவில்லாது படியளக்கும்போது, அங்கே கைலாசத்தில் இருக்கும் அம்மை பார்வதியாளுக்கு ஒரு சந்தேகம் சிவனின் மீது வந்தது. தினமும் ஈசன் படியளக்க போகிறேன் என்று செல்கிராரே அது எவ்வாறு, எவருக்கும் தவறாது எப்படி படியளக்க முடியும் என்று, ஈசனின் பணிமீது, தேவியின் மனதில் ஒரு சந்தேகம் வந்தது. எனவே இதை சோதித்து அறிய நினைத்தாள் அம்மை உமையவள்.
உடனே தேவலோக தேவ கட்சரிகளை அழைத்த தேவி, நீங்கள் சென்று ஒரு காஞ்சுராம் கம்பில் கடையப்பட்ட சிறு குமிழ் ஒன்றை செய்து வாருங்கள் என்றார். அவர்களும், மூடினால் காற்றுகூட புக முடியாத அளவில் துல்லியமான ஒரு காஞ்சிரங்குமிழை உருவாக்கி அம்மையிடம் அளித்தனர். உடனே தேவி பூலோகத்தில் இருந்து ஒரு சித்தெரும்பு ஒன்றை பிடித்து சிமிழுக்குள் அடைத்து, அதை தனது சேலை முடிப்பில் முடிந்து வைத்தாள்.
சிறிது நேரம் சென்றதும் ஈசன் அனைத்து உயிர்களுக்கும் படியளந்து மீண்டும் கைலாசம் வந்தார். இறைவனுக்கு அவர் வந்ததும் செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்த தேவி, இறைவனிடம் நீங்கள் எவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் படியளந்தீர்கள், ஒரு உயிர் கூட விடுபட்டிருக்காதா என்று ஈசனிடம் வினவ, அதற்கு ஈசன், ஒவ்வொரு உயிருக்கும், அந்த உயிர் அதன் முற்பிறவியில் செய்த நல்ல, கெட்ட காரியங்களின் கணக்குப்படி இந்த பிறவி வழங்கப்பட்டிருக்கும், அந்த பிறவிப்பலன் படி ஒவ்வொரு உயிருக்கும், ஒவ்வொரு நாளும் எவைஎவை வழங்கப்பட வேண்டும் என கணிக்கப்பட்டு வழங்கப்படும். இந்த கணக்கீட்டில் உணவும் அடங்குவதால், அதில் தவறு நேரக்கூடாது என்று நானே நேரில் சென்று என் கவனத்தில் வைத்து அளித்து வருகிறேன். எனவே தவறவே தவறாது என்றார்.
உடனே தேவி உமையாள் ஈசனிடம், ஈசனே நீங்கள் பூலோகம் சென்ற பிறகு என்னிடம் ஒரு உயிர் அகப்பட்டுக் கொண்டது. அது ஒரு வேளை உணவின்றி, உங்களை நம்பி உயிரை கூட விட்டிருக்கலாம் என்று கூறிக்கொண்டே முடிப்பை பிரித்து சிமிழை திறந்து பார்க்க, அதிர்ந்து போனாள். அங்கே அந்த சித்தெரும்பு வாயில் ஒரு திணை அரிசியை கவ்விக்கொண்டு குமிளுக்குள் சுற்றி சுற்றி வந்தது, அதனோடு இன்னொரு சித்தெரும்பும் துணைக்கு இருந்தது. உடனே தேவி இறைவனின் காலில் விழுந்து, ஈசனே தங்களின் பெருமையை நானே மறந்து, அறியாது தெரியாது மாபெரும் தவறை செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று நடுநடுங்கி அம்மை ஈசனிடம் மாப்பு கேட்க, ஈசனோ கண்கள் சிவந்து கடும் கோபம் கொண்டு அம்மை உமையவளுக்கு ஒரு சாபத்தை உதிர்த்தார்.
அந்த சாபம் என்னவெனில், கணவனை சொதித்ததால் காட்டு பேச்சியாக போகக்கடவது, மன்னனை சோதித்ததனால் மயான பேச்சியாக போகக்கடவது. பேயாக பிறந்தாலும் போதாது, நீ சுடுகாட்டு பேயாக போகவேண்டும், (பேச்சி என்று சொன்னால் தமிழில் பேய் என்று அர்த்தம). இப்படியாக பலவித சாபங்களை கொடுத்த சுவாமிகளிடம், அம்மை அழுது புலம்பியவாறே, ஈசனே இந்த அகோரமான சாபம் எனக்கு எப்போது தீரும் என்று கேட்க, அதற்க்கு ஈசன், நீ பேச்சியாக மயானத்தில் நின்று என்னை நினைத்து மாபெரும் தவம ஒன்று செய்தால், நான் அங்கு ஒரு ஆண் குழந்தையாக நான் அவதாரம் செய்வேன். நீ அந்த குழந்தையை கையால் தொட்டதும் உன் சாபம் தீரும் என்றார்.
ஈசனின் கோபத்தினால் சாபம்பெற்று பூலோகம் வந்த அம்மை உமையவள், பூலோகத்தில் தில்லைவன காடாகிய மயானபூமியில் ஐம்புலன்களையும் அடக்கி, ஈசனை நினைத்து, அம்மாள் பேச்சியாக ஒரு மபெரும் தவத்தை செய்யதார், அப்படியே அம்மையின் தவத்திற்கு இரங்கிய ஈசன் அங்கு பேச்சியான தேவிக்கு காட்சி கொடுத்தார். அப்படியே அம்மையிடம், உனக்கு என்ன வரம் வேண்டும் என்றார். அதற்க்கு அம்மை, ஈசனே நான் கணவன் உடன் சேராது ஒரு கைக்குழந்தை வேண்டும் என்றாள். உடனே ஈசன், பெண்ணே இந்த தில்லைவன காடாகிய மயானபூமியில், சிதையில் பிணம் கொடுஞ்சுடராக எரிந்துகொண்டு இருக்கும்போது, அந்த சுடரின் அருகாமையில் வந்து கண்களை மூடி முந்தாணி சேலையேந்தி என்னை நினைத்து நின்றால், ஒரு ஆண் குழந்தை அவதாரமாகும் என்றார். அப்படியே பேச்சி யாக அம்மை தவமிருக்க, மயானத்தில் பிணங்கள் எரிந்து வரும் சுடரிலிருந்து, சிவனின் திருவருளால் அம்மாவின் முந்தாணியில் சுடலை முத்துக்கள் வந்து விழுந்தன. அம்மா அவற்றை கூட்டி அள்ள அது ஒரு சதை பிண்டமாக உருவெடுத்தது. அந்த பிண்டதிற்கு உயிர் உள்ளது, ஆனால் அதற்கு எந்த உறுப்புகளும் இல்லை. உடனே அம்மை இறைவனை நினைத்து அழுது புலம்பி, ஈசனே பிள்ளைவரம் கேட்ட எனக்கு, ஒரு முண்டத்தை தந்து விட்டீரே, நான் என்னசெய்வேன் என்று முறையிட, ஈசனின் திருவருளினால் அந்த பிண்டம் அழகான ஒரு ஆண் குழந்தை வடிவம் பெற அம்மை மகிழ்ந்தாள். சுடரில் இருந்து உருவானதால் அந்தகுழந்தைக்கு சுடலை என்று பெயரிட்டாள்.
சுடலை குழந்தையாக இருக்க, அந்த குழந்தையின் அழகானது, ஏறு நெற்றி கூர்புருவத்துடனும், இருண்ட கண்கள், சிவந்த முகம், பவளம் போன்ற நிறத்துடனும் மாபெரும் அழகுடன் இருந்தது, உடனே அம்மை குழந்தைக்கு முத்தமிட்டு, நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, மயான பூமியில் வைத்தே சுடலைக்கு அமுதம் ஊட்டி, குழந்தையுடன் கைலாசம் வந்தாள் அம்மை உமையவள்.
கைலாசம் வந்த மாயக்குளந்தை சுடலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வேகமாக வளர்ந்து வருகிறது, நாட்கள் செல்கிறது, அப்படியே ஒருநாள் குழந்தைக்கு அமுதுஊட்டி தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு பார்வதி அரனுடைய பதிக்கு சென்றுவிட்டாள். அப்போது நாடு ஜாமம் 12 மணி, அந்த நேரதிலே தொட்டிலில் இருந்த திரு குழந்தைக்கு ஒரு விதமான வாசம் தென்பட்டது, அது பிணம எறியும் வாடை, உடனே சுடலை நினைக்கிறார், அந்த அம்மா நமக்கு அமுது ஊட்டி நேரமாகிவிட்டது, நமக்கு பசிக்கிறது, இனிமேல் இந்த அம்மா ஊட்டும் அமுதம் நமக்கு போதாது, தனது வயிறு இந்த வாடை வரும் பிணங்களை தின்றால்தான் நிறையும் என்று எண்ணி, எவருக்கும் தெரியாது, வடக்குவாசல் வழியாக, தில்லைவன காடகிய மயான பூமிக்கு சென்றார். அங்கோ ஏகப்பட்ட பிணங்கள் எரு அடுக்கி எரிந்துகொண்டிருக்க, அவற்றை பார்த்த சுடலை, வெந்து கொண்டிருந்த பிணங்களின் வலது சுற்றி இடமாக வந்து, எவளவு வேண்டுமோ அவ்வளவு பிணங்களை தின்று, அத்துடன் அங்கிருந்த பேய்களுக்கும் விருந்தளித்து, பேயோடு பேயாக பேச்சி மகன் சுடலை நடனமாடினார். நேரமானது, அப்படியே கைலாசம் வந்து தொட்டிலில் குழந்தையாக படுத்துக்கொண்டார் சுடலை. அத்துடன் நில்லாது வயிறு பசிப்பது போல குவா குவா என்று அழுதார் சுடலை, குழந்தை அழுவது கேட்டு ஓடிவந்த பார்வதி அம்மாள் அப்படியே குழந்தையை அள்ளி அணைக்க, குழந்தையின் வாயில் ரத்தம் வடிய, பிணவாடையும் வீச, பார்த்தாள் பார்வதி, ஐயோ என்று அலறி குழந்தையை வீசி எறிந்து, ஈசனே, இது என்ன சோதனை, குழந்தை வரம் கேட்ட எனக்கு பிணம் தின்னும் பேயை குழந்தையாக தந்து விட்டீரே என்று அழுதாள். உடனே வந்தார் பரமசிவன், உட்காரணம் இல்லாது எவையும் நடத்த மாட்டார் ஈசன். எனினும் காரணத்தை வெளிக்காட்டாது, அம்மையை பார்த்த சிவன், ஆம் தேவி இவன் பிணம் தின்றதால், சைவமான என்னுடைய கைலயதிற்கு ஆகமாட்டான் இவனை பூலோகத்திற்கு அனுப்பிவிடுகிறேன் என்று கூறி சுடலையை அழைத்தார்.
சிவன் அழைத்ததும் வந்தார் சுடலை. மகனே சுடலை, உடல் எரியும் மயான சுடரிலிருந்து அவதாரமானதால், அந்த சுடலையாண்டியும் நீதானப்பா, மயானத்தில் மாய உருவெடுத்ததால் மாயாண்டி சுடலையும் நீயே, பேய்களுக்கு அதிகாரி நீ, பேறுபெற்ற மாசுடலையும் நீயே என்று கூறி, மகனே நீ பூலோகம் செல் அங்கு உனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது என்றார், அதற்கு சுடலை, பகவானே, என்னை அவதரித்த நீங்களே என்னை பூலோகம் செல்ல பணிக்கும்போது, நான் என்ன செய்ய முடியும். உங்களின் மனம் படியே நான் செல்கிறேன். ஆனால், அப்பனே அங்கு நான் என்ன செய்ய வேண்டும், அங்கு உணவுக்கு என்ன செய்வேன், இப்படியே போனால் என்னை யார் மதிப்பார்கள், பூலோகத்தில் எங்கு இருப்பது என ஈசனிடம் கேட்க, அதற்கு ஈசன், மகனே, என் ஒரு கணி அசைவிற்க்கும் காரணம் உண்டு, நீ அங்கு சென்றதுமே நான் உன்னை நடத்துவேன். பூலோக இடுகாட்டு சிதைகளில் உனக்கு உணவு கிடைக்கும், அது போக மனிதர்கள் உனக்கு வில்லோடு முரசோடு வீரகண்டன் கொட்டோடு ஊட்டு போட்டு கோடை கொடுப்பார்கள் நீ போகலாம் என்று சொல்ல, சுடலையோ ஈசனை பார்த்து, பகவானே அதே ஊட்டு பூசையை இந்த கைலாசதிலேயே எனக்கு போட்டு தாருங்கள், அப்போதுதான் நான் பூலோகத்திலும் சென்று இதுபோல கேட்க முடியும் என்ன்று சொல்ல, படைப்பின் குணமறிந்து, கொடுப்பதை கொடுத்து இடத்தை மாற்ற நினைத்தார் சிவம்.
நித்ய சைவமான ஸ்ரீ கைலயதில், அனைத்து தேவதைகளும் அதிர்ச்சியில் நிற்க, சுடலைக்காக ஈசனே நின்று, கைலாச வாசலிலேயே பலவிதமான இரத்த பலிகளை கொடுத்தார். அந்த பலிகளானது, பரண் பரணாக ஆடு, எருமை, பன்றி, என பலவிதமான உயிர்வகைகளுடன் நிறைந்திருந்தது. அவற்றை உண்ட சுடலையோ, மீண்டும் ஈசனை பார்த்து, அப்பனே எனக்கு தகுந்த வரங்களை கொடு நான் செல்கிறேன் என்று சொல்ல, உடனே ஈசன் சில வரங்களை கொடுத்தார். அவைகளாவன, மகனே உனக்கு ஓங்கார பேய்களை எல்லாம் உருட்டி அடக்க வரம், தர்க்கமிடும் பேய்களை எல்லாம் தடி கொண்டு விரட்ட வரம், நீ மயான சாம்பலை கையிலெடுத்தால் தீராத வினைகளும், நோய் நொடிகளும் தீர்ந்தொளியும் என்றார். அதற்கு சுடலையோ, நல்லவை மட்டுமே செய்தால் போதாது அப்பனே, கேட்டவர்களுக்கு கேடும் செய்ய வேண்டும். நல்லவர்கள் என்னை அறியாவிட்டாலும், எனக்கு பணிவிடை செய்யாவிட்டாலும் நான் நல்லது செய்வேன், ஆனால் கெட்டவர்கள் மற்றும் துஷ்ட தனமானவர்கள், என் காலடி பணிந்தாலும் நான் கருவருப்பேன், அதற்கு வரம் தாருங்கள் என்று கேட்க, ஈசனோ கேள் தருகிறேன் என்றார்.
உடனே சுடலை அப்பனே, நான் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு இருப்பேன், நேரம் தப்பிய வேளையிலே, என் சட்டத்திற்கு விரோதமானவர்களோ, என்னை நம்பும் நல்ல குணவானுக்கு தீங்கு செய்பவனோ, மற்றும் துரோகிகளோ என் எல்லைக்குள் நுழைந்தார்களானால், அப்படியே, நேரம் தப்பி வருவோரை நெஞ்சடியாய் அடிக்கவரம், துரோகித்த, வாலிகளையும் சூலிகளையும் வஞ்சி கொண்டு குத்த வரம், மூன்று மாத சூலிகளை முட்டை போல நேரிக்கவரம், நிறை வயிராய் வருபவரை குறை வயிராய் ஆனுப்பவரம், என பலவகையான துஷ்டதனமான வரங்களை கேட்க, ஈசன் அனைத்தயும் கொடுத்தார்.
கயிலை நாதனாம் ஈசனிடமிருந்து, அனைத்து வரங்களையும் பெற்ற சுவாமி, வீர வேசம், விகாரமான சொருபத்தோடு, கைலாசத்தின் தெற்கு கோட்டை வாசல் வளியாக, பூலோகத்தில் இறங்க, தெற்கு நோக்கி அங்கே முதல் ஸ்தலம் திருக்கேதாரம், அடுத்து வரிசையாக, புத்த காசி, கெளரிகுண்டலம், உத்திரபிரயாதை, தேவபிரயாதை, ஹரித்துவாரம் என பலபல புனித ஸ்தலங்களை கண்டு வணங்கி, வடகாசியில் 64 தீர்த்தங்களில் நீராடி, அடுத்து இறக்க முக்தியாம் காசியிலும் மற்றும் பல தீர்த்தங்களிலும் நீராடி நமது தென்னாடு வந்தார். தென்னாட்டில் திருவேங்கடமலையில் திருவேங்கட நாதரையும், அடுத்து திருக்காளாத்தி ஈசனையும் வணங்கி, அடுத்ததாக பல்லவர்கள் ஆண்டு வரும் தொண்டை நாட்டிலே, பஞ்சபூத மண்டல ஸ்தலமாகிய காஞ்சியை கண்டார். அங்கு காஞ்சி அம்மாளையும், ஏகாம்பரநாதனயும் வணங்கி, அடுத்து திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் முக்திபெற்ற அண்ணாமலையாரையும், உண்ணாமுறைஅம்மாளையும் வணங்கி, மேலும் சிதம்பரம், சீர்காழி, திருவணைக்காவல் என பலபல ஸ்தலங்களை கண்டு வணங்கிய சுவாமி மாயாண்டி சுடலை, பாண்டியநாட்டு எல்லைக்கு வந்தார். அங்கு மதுரையில் வைகையில் தீர்த்தமாடி மதுரை மீனாட்சி அம்மாளையும், சோமசுந்தர பெருமாளையும் வணங்கினார். இப்படியே 1008 சிவ ஸ்தலங்கள், 108 திருப்பதிகளையும் மாயாண்டி சுடலை வணங்கிவந்தார். கடைசியாக மலையாள நாடு காணவிரும்பிய சுடலை, மலையாள மேற்ற்கு கடலோரம் கோகுர்ணம் என்று ஒரு புண்ணிய ஸ்தலம் அங்கு சென்று சிவத்தை வணங்கி, அடுத்ததாக வைக்கியம், குருவாயூர், திருவனந்தபுரம் என பல இடங்களை தரிசித்து கொட்டாரக்கரை என்ற ஊருக்கு வந்தார். அந்த ஊரின் அருகில் பேச்சி பாறை மலை. அங்கே சென்ற சுவாமி அங்கிருந்து கீழ்த்திசையில் பார்க்க, அங்கே பகவதி என்ற பெண் தேவதை இருப்பதை கண்ண்டார்.
கொட்டார கரையிலிருந்து அந்த பகவதி அம்மன் என்ற தேவதை மலையாளத்தை ஆண்டு வருகிறது. பகவதி அம்மனுக்கு மாதம் இரண்டு திருவிழா, வருடம் இரண்டு தேரோட்டம் நடக்கிறது. அப்படியே பகவதி அம்மன் தேர் திருவிழாவுக்கு அன்றும் கொடியேறி ஒன்பதாவது நாள் ஆகையால் தேரோட்டம் நடந்தது. தேரிலே அமர்ந்து பகவதி அம்மன் தெருவழியே ஊர்வலம் வந்து கொண்டு இருந்தார். அங்கோ வேதர்கள் எல்லாம் வேதங்களை சொல்லிவர, தேவதாசிகள் தேருக்கு முன்னால் ஆடிவர, நட்டுவன் கொட்டிவர, ஆடலுடன் பாடலுமாக அந்த அம்மன் பகவதி தேர் பவனி வருகிறாள். பார்த்தார் மாயாண்டி சுடலை. எந்த தெய்வத்திற்கு தேர் பவனி நடக்கிறதோ அந்த தெய்வத்தின் கொடி அந்த ரதத்தில் பறக்கும். திருமாலுக்கு கருட கொடி, சிவனுக்கு காளை கொடி, பிரம்மாவுக்கு அன்ன கொடி, முருகனுக்கு சேவல் கொடி, விநாயகருக்கு எலி கொடி. ஆனால் இங்கு ரதத்தில் பறக்கும் கொடியோ சிங்க கொடி. பார்த்தார் செஞ்சுடலை மாயாண்டி. சிங்க கொடி பறப்பதால் அதுவும் நமது தாய்தான் என புரிந்து கொண்ட மாயாண்டி சுடலை, அங்கே பேச்சி பாறை மலையிலிருந்து ஒரே பாச்சலாக தேர் மீது பாய்ந்தார். தேரில் சுடலை விழவும் தேரின் அச்சாணி இரண்டாக முறிந்தது. அங்கே சிலர் தேரோட்டம் பார்க்காது பக்தி மார்கமின்றி, ஆடிவரும் தாசிகளை பார்த்து கொண்டு இருந்தார்கள், அதில் ஒருவன் தலையை பிடுங்கி அவன் ரசித்த தாசியின் முகத்தில் வீசினார். அலறி விழுந்து இருவரும் மாண்டனர். அங்கிருந்து ஒரே பாச்ச்சலாக பகவதி அம்மனின் கோட்டைக்கு வந்தார். கோட்டைக்குள் வந்து கதவை சாத்திக்கொண்டு, உள்ளே கடுமையான அட்டகாசங்களை செய்தார் மாயாண்டி சுடலை. கோட்டையை இடிக்கின்றார், கொடிமரத்தை அசைகின்றார், கொடிமரத்தில் ஒருகாலும் கோபுரத்தில் ஒருகாலும் வைத்து ஆதாழி செய்தார்.
அம்மை பகவதி பார்த்தாள், எவனோ ஒருவன், நம் ரதத்தை ஓடித்துவிட்டு கோட்டையிலும் சென்று ஆதாழி செய்கிறானே, இது என்ன விவகாரம் என்று மந்திரவாளோடு கடும் கோபத்தோடு கோட்டைக்கு வந்தாள். வாயில் கதவை தட்டி, யாரடா நீ, பகவதி கோட்டையில் வந்து ஆதாழி செய்ய உனக்கு என்ன தைரியம் என்று சத்ப்தமிட்டு, கதவை திறக்கிறாயா, அல்லது எனது மந்திர வாளுக்கு பலியாகிறாயா என்று கேட்க்க, பார்த்தார் மாயாண்டி சுடலை, அம்மை மிகவும் கோபமாக இருக்கிறார். இந்த ரூபத்துடன் அம்மை நம்மை கண்டால் அம்மையின் கோபம தீராது என்று எண்ணி, ஒரு ஏழு வயது சிறுவனின் உருவம் பூண்டு அம்மையின் முன்னே பாலகனாக நின்றார் மாயாண்டி சுடலை. அம்மை நேருக்கு நேராக பார்த்தாள் சுடலையை. இந்த பாலகனா இவளவு சேட்டை செய்தது, வேறு யாராவது கோட்டையில் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு சுடலையிடம் வந்து, யாரப்பா நீ, உன் குலம் கோத்திரம் என்ன, ஏன் அனாதையாக வந்து நிற்கிறாய் என்று, குழந்தையை கண்டவுடன் சோகம் உட்புகுந்து, இறக்க குணத்துடன் அம்மை சுடலையிடம் கேட்டார்.
சுடலை சொன்னார், அம்மையே என்னுடைய வரலாறே மிகவும் விசித்திரமானது, எல்லாரு இறந்த பிறகுதான் சுடுகாடு போவார்கள், ஆனால் நான் படைக்கப்பட்டதே மயான சுடலையில், சுடலையில் உருவானதால் எனக்கு சுடலை என்று பெயரிட்டார்கள். நான் பார்வதியாள் பிள்ளை, பரமனுடைய அமுஷம், பிறந்த இடம் உயர்ந்த இடம், நல்ல பிள்ளையாக இருந்திருக்கலாம், வீட்டுக்கு அடங்காமல் மாயானத்திலே போய் பிணத்தை தின்றுவிட்டு வந்துவிடவே அவர்கள், என்னை, நீ மாமிசத்தை தின்றதால் மாணிக்க கைலாயத்திற்கு ஆகாது எனவே, பூலோகத்திற்கு செல் என்று புறக்கணித்து அனுப்பிவிட்டார்கள். ஆகையால் தாயே இங்கு நான் தலை கீழாக வந்து விழுந்து விட்டேன்.
இந்த மண்ணுலகில் தாயே எனக்கு, அக்கமில்லை பக்கமில்லை ஆதரிப்பார் யாருமில்லை, திக்கு அற்ற பாவி போல இந்த தெருவில் நின்று தவிக்கின்றேன், நான் பார்வதிக்கு பிள்ளை என்றால் இந்த பகவதிக்கும் குழந்தைதானே, இப்போது வளப்பார் கை பிள்ளையாக வந்தேனம்மா உன்னிடத்தில், இருக்க ஒரு இடம் கொடு, நான் இருக்கின்றேன் உன்னுடனேயே என்றார் மாய சுடலை. பகவதி அம்மனுக்கு இரக்கமாகவும் இருந்தது, பார்த்தாள் பகவதி, இப்படி ஒருவன் நமக்கும் தேவைதான் என்று எண்ணி, மகனே நீ பார்வதிக்கு பிள்ளை எனில், நீ எனக்கும் பிள்ளைதான், அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நீ வரவேண்டிய இடத்திற்குத்தான் வந்திருக்கிறாய். தாயிடத்தில் வந்தபிள்ளை இனி கவலை படவேண்டாம், சுடலையில் பிறந்தால் உனக்கு சுடலை என்று பெயரிட்டதாக சொன்னாய், நானும் உனக்கு பெயரிடுகிறேன், தேரின் அச்சை உடைத்ததால் உனக்கு தேரடிமாடன் என்று பெயரிடுகிறேன், உனக்கு தேரடியிலே ஒரு நிலையம், தெப்பக்குளத்தில் ஒரு நிலையம் , கொபுரத்திலே ஒரு நிலையம் , கொடிமரதிலே ஒரு நிலையம் போட்டு தருகிறேன், அது மட்டுமல்ல, எனக்கு இடது பக்கம் ஈசான மூலையில் தெற்குமேட்டுகலுங்கு திருவாத்தி மூட்டுக்குள்ளே ஏழு அண்டா திரவியம் தண்டயத்தில் அசையாது இருக்கிறது. அதை கள்வர்கள் கொண்டு செல்லாது மெய்க்காவல் காத்துவந்தால் உனக்கு வயிறார உணவு தருகிறேன் என்றார்.
அம்மை பகவதியின் மொழி கேட்ட சுடலையோ, அம்மா உன்னுடைய உணவு வேறு, என்னுடைய உணவு வேறு. உனக்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார் உனக்கு பூஜை செய்வதை இரு தினமாக நான் பார்க்கிறேன். உனக்கு ஒரு பித்தளை தாம்பாளத்தில் உப்பில்லாத பச்சரிசி சாதம் ஒரு கரண்டி வைத்து, ஒரு துணியை போட்டு மூடி, அதை, கணபதிகோயில் முதல் பைரவர் வரை அதையே படைக்கிறார். எனக்கு இந்த பூஜை போதாது, எனவே எனக்கு தனியாக ஒரு படப்பு போட்டு கொடு என்றார். அத்துடன், அந்த படப்பில் ஒரு நாளைக்கு ஒரு கோட்டை அரிசியை பொங்கி மூன்று உருண்டையாய் உருட்டி தரவேண்டும் என்றார். பகவதி அம்மையும் சரி என்று சம்மதிக்கவே, சுடலை ஆண்டவர் தன்னுடைய பூஜையை வாங்கிக்கொண்டு திரவியத்தை காத்து வருகிறார்.
அப்படியாக, கொஞ்ச நாளாக திரவியத்தை காத்து வருகிறார். ஆனால் சுடலையால் இருந்த இடத்தில அப்படியே இருக்க முடியவில்லை. அம்மை பகவதியை தரிசிக்க கோவிலுக்கு வருபவர்களில் யாரவது கெட்டவர்கள் மற்றும் துஷ்ட தனமானவர்கள் சுடலையின் பார்வையில் பட்டால், உடனே அவர்களை கொன்று தின்ன ஆரம்பித்தார். இதை தெரிந்துகொண்ட அம்மை வந்து தடுத்தாள், மகனே, கெட்டவர்கள் ஆனாலும் திருந்த வாய்ப்பு அளிக்கவேண்டும், அதற்காக இவளவு பெரிய கொலை தண்டனை கொடுக்க கூடாது, வேலியே பயிரை அளிக்க கூடாது, நீ காவல் தெய்வம், அதுவும் நம்மை வணங்க வருபவர்களை நாமே அடித்து கொல்லலாமா, தவறு செய்யாதே என்றார்.
அதற்கு சுடலை, அம்மா எனக்கு எல்லா நீதிகளும் தெரியும், எல்லா தர்மங்களும் தெரியும், நீ கொடுக்கும் தேங்காய் சில்லையும், பச்சரிசி சாதத்தையும் தின்று வயிறு நிறையவில்லை. நான் எவ்வளவு பசியில் இருந்தாலும் இங்கு வருபவர்களில் குணவன்களையும், நல்லவர்களையும் பார்க்கும்போது என் பசி மறந்து அவர்கள் என் பிள்ளைகளாக தெரிகின்றனர், அவர்களை, அவர்களுக்கு வரவிருக்கும் தீமைகளில் இருந்தும் துயரங்களில் இருந்தும் பிரித்து அவர்களை பாதுகாக்கிறேன். ஆனால், என்வயிறு நிறைந்து இருக்கும் போதும் கூட, துரோகிகளும் துஷ்ட தனமானவர்கள் என் கண்களில் பட்டாலே எனது வயிறு பசிஎடுத்து அவர்களை அழித்து தின்று விடுகிறேன். ஈசன் என்னை இப்படி படைத்தது விட்டார். நான் என்ன செய்வது என்றதுடன், அம்மையே உன்வருத்தம் எனக்கு புரிகிறது, ஆகையால், தினமும் உனக்கு மத்தியானம் உச்சிகால பூஜை நடக்கும்போது எனக்கு ஒரு சேவல் குடு, வெள்ளி கிழமையானால் ஒரு தீர்த்தம் வைத்து கொடு, மாதம் கடைசி செவ்வாய்க்கு ஒரு படுக்கை போட்டு குடு, வருடம் ஒரு தடவை உனது தேரோட்டத்துக்கு முன்னதா எனக்கு ஒரு ஊட்டு போட்டு குடு, அதன் பிறகு நான் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்றார் சுடலை. பகவதி அம்மை சொன்னாள், அடேய் இது சிவகாம முறைப்படி பூஜை நடக்கும் திருத்தலம், இந்த சைவ பூஜையில் நீ இரத்தம் கேட்பது நியாயம் இல்லை, இஷ்டமானால் இரு, இல்லையெனில் இடத்தை காலிபண்ணு என்றார் அம்மை.
இனிமே இந்த அம்மாளிடம் அடங்கி போனால்தான் காரியம் நடக்கும் என்று எண்ணிய சுடலை, அம்மா நான் கேட்பதற்குரிய பலியை நீ கொடுக்க மறுத்தாலும், வெள்ளியும் செவ்வாயும் எனக்கு விடுமுறை கொடு, எனக்கு வேண்டிய உணவுகளை நான் மயானத்தில் சென்று தின்று வயிறை நிறைத்து கொள்வேன் என்றார் சுடலை. அதற்க்கு அம்மாளும் சரியென்று சம்மதித்தார். அன்றையிலிருந்து சுடலை வெள்ளியும் செவ்வாயும் மயான வேட்டை ஆடிவருவது வழக்கம். நாட்கள் கடக்கிறது.
அதே சமயம், அதே அந்த மலையாளத்தில், நந்தன் புனலூர் சலியர்கரை நான்கு சாலியர் தெருவிலே, அந்த காலத்தில் 1008 வீட்டு புலையன்மார்கள் வசித்து வந்தார்கள். இந்த புலையன்மார்களுக்கு எல்லாம் ஒரு தலைவன், அவன் பெயர் காளிப்புலையன். இவர்களின் தொழில் மாந்திரீக தொழில். அதுவும் சாதாரணப்பட்ட மாந்திரீகம் அல்ல, அந்த புலையன்கள், வானத்தையே வில்லாக வளைத்திடுவார்கள், மணலிலேயே கயிறு திரித்திடுவார்கள், அவர்கள் உரலுக்குள் மையை வைத்து அதை இந்த உலகமெல்லாம் சுற்ற விடுவார்கள், அது உலகமெல்லாம் சுற்றி வீட்டுக்கு வரும், அம்மிக்குள் மையை வைத்து அதை இந்த அகிலமெல்லாம் பறக்க வைப்பார்கள், அது அகிலமெல்லாம் பறந்து வீட்டுக்கு வரும், சுளவு தட்டியையும் தொண்ணூறு காதவெளிக்கு பரக்கவிடுவார்கள், அது ஒற்று பார்த்து வரும், கரையாத பொருட்களையும் கரைக்க வல்லவர்கள், கனத்த உருக்களையும் அளிக்க வல்லவர்கள். இந்த மந்திரவாதி காளிப்புலையனின் மனைவி காளிப்புலச்சி.
இரண்டுபேருக்கும் வெகு நாளாக குழந்தை இல்லாது போக, அவன் மனைவி காளிப்புலச்சி, நந்தன் புனலூரில் ஒரு பாதாள கண்டி ஈஸ்வரி என்ற ஒரு அம்மன் கோவில், அங்கு பொய் 48 நாள் ஒரு மண்டல காலம் விரதம் இருந்தாள். ஒரு காகமானது அக்கிரகாரதிலே, அவ்வையார் விரதமிருந்த ஒரு ஆச்சி வீட்டிலிருந்து ஒரு மா கொளுகட்டையை கொண்டுவந்து, கரமேந்தி தவசிருந்த காளிப்புலச்சி கையில் போட்டது, கோவிலில் கிடைத்தால் பிரசாதமாக நினைத்து அதை எடுத்து உண்டாள் காளிப்புலச்சி. அன்று முதல் அவள் கருவுற்று பத்தாவது மாதம் பெண் குழந்தை பிறந்தது. தவமிருந்து கிடைத்த குழந்தை ஆதலால் சந்தொசமுற்ற காளிப்புலையன், ஊர்மெச்ச விழா எடுத்து கொண்டாடினான், அவனுக்கு குலதெய்வம் இசக்கி. மாப்பிண்டதிலே அவதாரம் ஆனதால், இரண்டயும் இணைத்து மாவிசக்கி என்று குழந்தைக்கு பெயர் நாமம் சூட்டினான். அந்த குழந்தை இனிதே வாளர்ந்தது. ஐந்து வயதிலிருந்து அறிய கலைகளை படிக்கவைதான். பதிமூன்றாம் வயதிலே பருவமடைந்தாள் மாவிசக்கி. அவள் அழகை உவமானம் சொல்ல யாராலும் முடியாது. ஊரே மயங்கும் பேரழகு, மகளை பார்த்த காளிப்புலையன் யோசித்தான், நம் மகளின் அழகுக்கு நிகரான நகைகள் பூட்டி அவளை அலங்காரம் செய்ய ஆசைப்பட்டான், ஆனால், அவன் நியாயமான முறையிலே ஆசைப்பட வில்லை, அவனது மாந்திரீக புத்தி, அவனை கெடு வழியில் செல்ல தூண்டியது,
அஞ்சணமை என்று ஒரு மை, அதை கண்ணில் இட்டால் பூமியிலிருக்கும் புதையல் கூட புலப்ப்படுமாம். அந்த அஞ்சணமையை எடுத்து வெற்றிலையில் தடவி பார்க்கிறான், அங்கே, கொட்டாரக்கரை, பகவதி வாசல், தெற்குமேட்டுகலுங்கு, திருவாத்தி மூட்டுக்குள்ளே ஏழு அண்டா திரவியம் அசையாமல் இருக்ககிறது. அன்று வெள்ளிக்கிழமை ஆகையால் சுடலை மயான வேட்டைக்கு சென்று விட்டார். இதுதான் நல்ல தருணம், அந்த திரவியத்தை களவெடுத்து, வந்து மகளுக்கு நல்ல அணிகலன்கள் செய்ய வேண்டும் என்று மாந்த்ரீக சாலத்தோடு பெரும்புலையன் கிளம்புகிறான். மாந்த்ரீக வேலையோடு கொட்டாரக்கரை பகவதி வாசல் வந்து, ஏழு அண்டா திரவியத்தில், ஒரு அண்டாவை பெரும் புலையன் கொள்ளை போட்டு வீட்டுக்கு வந்தான்.
மயானம் போன சுடலை கலுங்குக்கு வந்தார், ஏழு அண்டா திரவியத்தில் ஒரு அண்டா காலியாக இருக்க கண்டார். பகவதியிடம் வந்தார் சுடலை, அம்மா நான் காவல் காத்த திரவியத்தை எவனோ களவெடுத்து சென்றுவிட்டான், யார் அவன், அவன் திசையை சொல்லு என்று கேட்டார் மாயாண்டி சுடலை. அதற்கு அம்மாள் சொன்னாள், மகனே திரவியம் போனாலும் போகட்டும், அவனை பற்றி கேளாதே என்றார். ஏனென்றால் அவன் காலனை விட கொடியவன், கொடிய பாவி அவன், மகனே, நந்தன் புனலூர் சலியர்கரை நான்கு சாலியர் தெருவிலே, 1008 வீட்டு புலையன்மார்கள் வசித்து வருகிறார்கள், அந்த புலையன்மார்களுக்கு எல்லாம் அவனே தலைவன், நமது திரவியத்தை களவெடுத்ததும் அவனே என்றாள் அம்மை. மேலும், பாம்பு கடித்து இறந்தார்கள் என்று யாரும் கண்டதே கிடையாது அவன் வாழும் தெருவிலே, தேள் கொட்டி அழுதவர்கள் அங்கு யாரும் இல்லை, அவர்களை எதிர்த்து சென்றவர்கள் திரும்பி வந்த சரித்திரமே இல்லை, அவளவு கொடிய மாந்திரவாதிகள் இருக்குமிடம், ஆகவே நீ போனால் உன்னையும் பிடித்து அடைத்து விடுவான், ஆகவே போக வேண்டாம் மகனே, போனது போகட்டும், நீ உள்ளே இரு என்றார் அம்மை. சுடலை கேட்கவில்லை, அம்மா, என்னுடைய காவலிலிருந்து ஒருவன் களவெடுத்து சென்ற பிறகும் நான் ஏனென்று கேட்க்காது இருப்பது முறையா. நீ ஒரு வார்த்தை சொல்லு. மகனே சுடலை சென்று வா, வென்று வா என்று ஒரு முறை ஆசி கொடுத்து அனுப்பு, வென்று வருகிறேன். எப்படி தெரியுமா ?
கொள்ளை கொண்டு சென்றவனை கொடியருத்து வாறேனம்மா, களவெடுத்து சென்றவனை கருவறுத்து வாறேனம்மா, மங்கவாய் வாயதிலே மண்ணள்ளி போட்டுவாரேன் எனக்கூறி, பலி வேகம் கொண்டு கொடும் சப்தமிட்டார். எல்லாம் கவனித்த அம்மாள் பார்த்தாள், இனி இவனை அடக்க முடியாது என்று உணர்ந்து, சென்று வா மகனே சென்று வா, புலையனை வென்று வா மகனே வென்று வா என்று வாழ்த்தி நல்ல விடை கொடுத்து, மந்திரித்த வல்லயத்தையும் கொடுத்து, திருநீறையும் கொடுத்து, சுடலையை, பகவதி அம்மையே அனுப்பி வைத்தாள்.
அங்கிருந்து வீர விகார வேசத்தோடு வந்த சுடலை அவன் வீடு நெருங்கியதும், யோசித்தார், இதற்கு அந்தப்புறம் நாம் இந்த சொருபத்தோடு செல்ல கூடாது. அந்த திருட்டு பயலை வேசம் போட்டுத்தான் மோசம பண்ணவேண்டும் என்று முடிவெடுத்தார். அதன் படியே ஒரு பாம்பாட்டி சித்தன் உருவம்பூண்டு, மகுடி எடுத்து ஊதினார், ஏகப்பட்ட பாம்புகள் வந்து கூடியது. அந்த ஆயிரம் பாம்பு கூட்டத்தில் ஒரு நாக பாம்பையும் ஒரு நல்ல பாம்பையும் பிடித்தார். பல தலை உடையதை நாகமென்றும், ஒரு தலை உடையததை நல்ல பாம்பு என்றும் சொல்வர். அந்த இரண்டு பாம்புகளையும் ஒரு கூடையில் அடைத்து, கூடையை தலை மேல் வைத்து, புலையர்களின் உயிரை கவரக்கூடிய ஒரு கூற்றுவனைபோல சுவாமி நடந்து வருகிறார். அப்படியே நான்கு சாலியர் தெருவை அடைந்த ஸ்வாமிகள், இங்குதான் பாம்பு வித்தை காட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். அப்படியே பாம்புகளை வெளியே எடுத்து , ஆட விட்டு பல கொடிய வேடிக்கைகளை செய்கிறார், அந்த வேடிக்கைகளை புலையன்மார்கள் பலர் வந்து பார்த்தாலும் காளிப்புலையன் வீட்டிலிருந்து எவரும் வரவில்லை. பார்த்தார் சுவாமி, வேடிக்கை காட்டுவது இப்போது முக்கியமில்லை, காளிப்புலையன் வரவில்லை என்றால் என்ன, நாமே அவன் இடத்திற்கு செல்வோம் என நினைத்த சுவாமிசுடலை, அந்த உருவை மாற்றி, ஒரு வயதான கிழவனைப்போல உருவெடுத்தார், அந்த உருவமானது, பழுத்த உடல் வெளுத்த தலையுமாகவும், உடலில் வெடித்த வெள்ளரி பழம் போன்ற வரிகளும், அந்த வரிகளில் வெள்ளி ஊசி போன்ற புழுக்களும் நெளிய, ஒரு வெறுக்கும் படியான உருவத்துடனும், காவி உடையோடு கழுத்திலே உத்திராட்சம், நெற்றியிலே விபூதி, ஒரு கையில் ஊன்றுகோல், மறு கையிலே திருவோடுமாக, தள்ளாடி தள்ளாடி, நடை நடந்து சுவாமி அந்த மாந்திரவாதியின் வீட்டு வடக்கு வாசலில் வந்து நின்றார்.
மாந்திரவாதி காளிப்புலையன் வீட்டில், அங்கு ஏழு அறைக்குள்ளே காளிப்புலையன் மகள் மாவிசக்கி தோளியர்களுடன் தன்னை தானே அலங்காரம் செய்து, அங்கு ஆடலும் பாடலுமாக மகிழ்ந்து கொண்டிருந்தாள். தாயும் தந்தையும் வெளியே சென்றிருந்தனர். உடனே சுவாமி வடக்கு வாசலில் நின்று பிச்சை கேட்பதுபோல, வீட்டில் யாரம்மா இருப்பது, ஒரு ஏழை ஆண்டி வந்திருக்கிறேன், கொஞ்சம் அன்னம் தாருங்கள் என்றார். அவளோ, யாசகம் கேட்பது சிவனடியார் என்று நினைத்து கையிலே கொஞ்சம் திணையை அள்ளிக்கொண்டு வந்தாள் மாவிசக்கி. இவள் வடக்கு வாசலில் வந்தால் சுவாமி தெற்கு வாசலில் நின்று, மீண்டும், அடியே பிட்சை போடு என்பார். மாவிசக்கி அங்கு சென்றால் உடனே அடுத்த வாசலுக்கு செல்வார். இப்படியே அவளை அலைக்கழித்தார். இதனால் கோபமடைந்த மாவிசக்கி சுடலையை பார்த்து, அடேய் கிளட்டுப்பயலே, மரியாதையாக தருவதை வாங்கிவிட்டு வீட்டைவிட்டு ஓடிவிடு என்று சத்தமிட, வந்தார் சுடலை, பெண்ணே நான் பிச்சைக்காக வந்தேன் என்று நினைத்தாயா, இல்லை, உனது அப்பனுக்கும் எனக்கும் ஒரு கணக்கிருக்கிறது, அதை முடிக்கவே நான் வந்தேன் என்று கூறி, மாரியாதை குறைவாக பேசினால் உன்னையும் இல்லாது அளித்திடுவேன் என்றார். அத்துடன், உன்னிடம் பேசி பேசி நாவறண்டு போனது கொஞ்சம் தண்ணீர் கொடு என்றார். அதற்க்கு மாவிசக்கி, அடேய் கிழவா நான் யாரென்று அறியாது பேசுகிறாய், அத்துடன், உனக்கு தர தண்ணீரும் இங்கு இல்லை, உனக்கு தண்ணீர் தரும்படியான இழிவான ஆட்களும் இங்கு இல்லை என்று அகங்காரமாக சொன்னாள். உடனே செஞ்சுடலை அவளை பார்த்து, அடி மாவிச்க்கி, உன் அப்பனுக்கு பசும பாலை கறந்து கொண்டு வந்து அலமாரியில் வைத்திருக்கிறாய், என்னிடமோ உனக்கு தர ஒன்றுமில்லை என்கிறாய், அது போக என்னை மிக இழிவாக பேசிவிட்டாய். கள்வனுக்கு பிறந்த நீயே இழிவானவள். ஆகவே இன்னும் எட்டு நாட்களுக்குள் உன்னை கன்னிகழித்து உன் அகங்காரத்தை அழித்து, அத்துடன், உன்னையும் உனது அப்பனையும் அவன் குடியையும் கருவறுத்து அளிப்பேன், இது தவறினால், நான் மயானத்தில் உருவெடுத்து கைலாசத்தில் வளரவும் இல்லை, என் தாய் பார்வதி தேவியாம் பேச்சியும் இல்லை, என்பெயர் சுடலையும் இல்லை என்று மார்தட்டி சபதம் வைத்த மாயாண்டி சுடலை மாயமாக மறைந்துவிட்டார்.
மாலை நேரம் சென்றதும் காளிப்புலையன் வீட்டிற்கு வந்தான். நடந்தது அனைத்தையும் சொன்னாள் மாவிசக்கி. அப்படியா என்வீட்டிலே வந்து ஒருவன் கருவருப்பானா, பார்கிறேன் நான் என்று கூறிய காளிப்புலையன், மை போட்டு பார்க்கிறான், சுடலை என்று அறிந்தான். திரவியதிற்கு காவல்காரன் வீடு தேடி வந்து விட்டான் இனி நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று புரிந்துகொண்ட காளிப்புலையன் காவலும் கட்டுமாக இருக்க, அதே அந்த மலையாளத்திலே ஆலடிப்புதூரிலே பளியன்மார்கள் எல்லாம் கூட்டு பங்காளியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் காக்காச்சி மலை தாண்டி கண்ணாடி சோலைக்குள்ளே, அக்காலத்திய முறைப்படி விவசாயம் செய்தார்கள். செய்த விவசாயம் அங்கே பயிரில் பலன் பிடிக்கும் நேரம். அதே நேரத்தில் சுடலை தான் போட்ட சபதத்தை முடிக்கவேண்டும் என்று, எட்டாம் நாள் சாமம், அந்த புலையனின் கோட்டைக்கு வந்தார். அங்கு ஏழு அறைக்குள்ளே எரும்ம்பு ரூபம் எடுத்து மாவிச்க்கியின் அறைக்குள்ளே நுழைந்து, மாவிசக்கியாளை கொண்ட கணவனைப்போல கூடவே படுத்திருந்து கற்பழித்தார், கற்பழித்து முடிந்ததும் வெளிப்பட்டார் சுடலை. அடுத்து நேராக, காக்காச்சி மலை கண்ணாடி சோலைக்குள்ளே மத யானை போல நுழைந்து அனைத்து பயிர்களையும் அடி முதல் வேர்வரை சர்வநாசம் செய்து அனைத்தயும் அழித்தார். அழித்துவிட்டு அப்படியே கொட்டாரக்கரை பகவதி வாசலுக்கு வந்தார்.
பளியன்மார்கள் மறுநாள் விவசாயத்தை பார்க்க வந்தார்கள். சோலையே அழிந்து போனது கண்டு திகைத்தவர்கள் புலையனிடம் ஓடிவந்தார்கள், நடந்ததை தெரிந்துகொண்ட புலையன், காரணம் கண்டுபிடிக்க மையிட்டு பார்த்தான், அங்கேயும் ஆடியது சுடலைதான் என்பதை கண்ண்டான். உடனே சுடலையை அடக்க என்ன வழி என்று அவனது மாந்திர சக்திவளியாக ஆராய்ந்து பார்க்கிறான். அவனது மாந்திர குறி சுடலை கேட்பதை கொடுத்தால் அவரை அடக்கலாம் என்று சொல்கிறது, சுடலையை அடக்கி அடைக்கவில்லை என்றால் பெரும் இழப்புக்கள் நேரும், ஆகையால், எப்படியாவது சுடலை கேட்பதை கொடுத்து அவரை அடக்கி நிலை கட்டநினைத்தான் புலையன். ஆகையால், மீண்டும் வெற்றிலையில் மை போட்டு சுடலையை அழைக்கிறான். மையில் சுடலைவந்தார். ஏய் கீழ் நெறி புலையனே, என்னை இப்போதுதான் அறிந்தாயா, நீ இல்லாததால், உன் மகளை கற்பழித்து, உன்னுடைய சோலை நடுவங்களையும் அளித்தது நான்தான், அடுத்து உன்னையும் அளிப்பேன் என்று வெறி கொண்டு சொன்னார். சுடலையின் சக்தி அறிந்து பயந்து போன புலையன், சுடலை எதை கேட்டாலும் அதைகொடுத்து அவரை எப்படியாவது அடக்க நினைத்து, என்ன நீ கேட்டாலும் தருகிறேன், உன் கோபம தீர நான் என்ன தரவேண்டும், எதை கேட்டாலும் தருகிறேன் என்றான். அதற்க்கு சுடலை, நீ யாருக்காக எனது கட்டு காவலை மீறி எனது அம்மையின் திரவியத்தை களவெடுத்தாயோ, அந்த மாவிசக்கியை கருவோடு கொடிபுடுங்கி எனக்கு காபூசை கொடுத்தால் உன் கட்டுக்குள் அகப்படுவேன், இல்லையென்றால் அடுத்து உன்னையும் அழிதிடுவேன் என்றார்.
எப்படியோ தான் தப்பினால் போதும் என்று எண்ணிய சிறு குணத்தான் புலையனவன், மாவிசக்கியை, அந்த காக்காச்சி மலை கண்ணாடி சோலைக்குள்ளே கொண்டு வைத்துக்கொண்டு, ஏழு பரண் போட்டு, ஏழுவிதமான பலிகளை கொடுத்தான். சுடலையோ, டேய் புலையனே சொன்னது போல உன் மகளை பழிபோட்டு கொடு இல்லையென்றால், நீ நினைத்தது நடக்காது என்று கர்ஜிக்க, தான் பெற்ற மகளென்றும் பாராமல் அந்த சண்டாளப்பாவி புலையன், சூல்கொண்ட ஒரு பசுவை கிடதுவதுபோல பரணின்மேல் கிடத்தி, கை கால்களை கட்டி, அவளது வயிற்றை கிழிக்க ஆயுதத்தை கையில் எடுத்தான்.
அப்போதுதான் தான் சாகப்போகிறோம் என்று மாவிச்க்கிக்கு தெரிந்தது. அட சண்டாளப்பாவி புலையனே, அருமை பெருமையாக வளர்த்து, எங்கோகண்ட பேய் படைக்கோ என்னை பலிகொடுக்க வந்துவிட்டாயே என்று அளுத்து புலம்பி பதறினாள். அவளின் பதரலை பார்த்த சுடலை, யாரும் அறியாது நொடி வேளையில் அவளின் மனதிற்குள் புகுந்து, பெண்ணே நீ முற்பிறவியில் செய்த பலன் படி இந்த கள்வனுக்கு மகளானாய், பெற்றோர் செய்யும் தவறுகளுக்கு பிள்ளைகளும் பதில் சொல்லவேண்டும், என் அம்மையின் பொருளென்று அறிந்தும் நீ அதை அனுபவிக்க துணிந்தாய், அதனால் இப்பிறவியிலும் தவரிளைத்தாய், ஆகவே எனது சட்டப்படி இவைகளுக்கு நான் வழங்கும் கூலி இதுவே என, நெறி புரிவித்து அதே நொடியில் வெளி வந்தார்.
வெளிவந்த சுடலை, டேய் வேளை தவறுகிறது என்று ஓங்கார சப்தமிட, தான் தப்பினால் போதும் என்று எண்ணிய புலையன், தான் பெற்ற மகளென்றும் பாராமல் மாவிசக்கியின் வயிற்றை கிழித்து, மாவோடு கருவோடு பிள்ளையை பிடுங்கி, தலைவாழை இலையில் வைத்து சுடலைக்கு வாரிக்கொடுத்தான். அதை ஏற்ற சுடலை அவன் சொல்லுக்கு கட்டுப்படுவது போல் அவன் சிமிளுக்குள்ளே நுழைந்தார். புலையன் சுடலையை சிமிழோடு ஒரு தாமிர தூருக்குள்ளே வைத்து குளத்திற்குள் புதைத்தான். அடுத்து அதே குளத்திற்கு புலையனின் மனைவி தண்ணீர் எடுக்க வந்தாள். தூரை வெடித்து சிமிழோடு வெளியான சுடலை புலையனின் மனைவியின் தண்ணீர் குடத்தினுள் சிமிளாக புகுந்து கொண்டார். குடம் வீட்டுக்குள் வந்ததும் குடத்திலிருந்து துள்ளி சிமிளாக வந்து அருகிலிருந்த புலையனின் இடது கால் தொடையில் அமர்ந்து கொண்ண்டார். பயந்து போன புலையன், இவன் நம்மை இன்னும் விட வில்லையே என்று நினைத்து, சிமிளை உரலில் இட்டு இரும்பு உலக்கையால் இடித்தான், சிமிழ் உடைந்து வெளிப்பட்ட தேரடிமாடன் மாயாண்டி சுடலை, வல்லயமும் தடியோடு வீர வேக உருவோடு நின்று, அந்த புலையனை ஒரே அடியாக அடித்து ஊட்டியை முறித்து உதிரத்தை குடித்து அவனை அளித்து, அவனது மனைவி காளிப்புலைச்சியையும் அளித்து, அந்த திரவியத்தை எடுத்து, பழையபடி கொட்டாரக்கரை, பகவதி வாசலுக்கு கொண்டு வந்து பகவதி அம்மையிடம் ஒப்படைத்தார்.
அம்மையிடம் ஆசிவாங்கி, மீண்டும் நம் நாட்டிலுள்ள எல்லா தீர்த்தங்களும் ஆடி, 1008 சிவ ஸ்தலங்கள், 108 திருப்பதிகளையும் மாயாண்டி சுடலை வணங்கி, எல்லா தெய்வங்களையும் தொழுத சுவாமி மாயாண்டி சுடலை ஆண்டவர், மீண்டும் தென்னாடு வந்து தென்நாட்டில் குற்றாலம் வழியாக சீவலப்பேரிக்கு வந்து சீவலப்பேரி சுடலையாக குடி கொண்டார். அங்கிருந்து பிடி மண் மூலம், வள்ளியூர் அருகே சிறுமளஞ்சியில் ஒத்தப்பனை சுடலை ஆண்டவராகவும், ஆறுமுகமங்கலத்தில் ஆறுமுகமங்கல சுடலையாகவும், மற்றும் தென் நாடு முழுக்க பல இடங்களில் சுடலை ஆண்டவன் பரந்து விரிந்து வீற்றிருந்து இன்று தன் ஆட்சியை நடத்தி வருகிறார். தன்னை நம்பிவரும் பக்தர்களுக்கு நல்லருள் அருள் பாலிக்கிறார்.
நல்லோர் மனதை நடுங்க செய்பவர்கள், நட்டாற்றில் கையை நழுவ விடுபவர்கள், வரவுபோக்கிற்கு வழி அடைப்பவர்கள், வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பவர்கள், கற்பு வழி நிற்கும் கன்னியரை அழிப்பவர்கள், பொது சொத்தை கொள்ளை அடிப்பவர்கள், பதவியை பயன்படுத்தி பகட்டு வேஷம் போடுபவர்கள் இன்னும் பல ஆயிரமாயிரம் நரித்தனம் செய்யும் நயவஞ்சக மனிதர்களை கழுவேற்றி காவுகொள்கிறார். கண்ணீருடன் சுடலையிடம் முறையிடுவர்களுக்காக இன்றும் துரோகிகளை பழிதீர்த்து நல்லவர்களை காப்பாற்றி வருகிறார். சுடலை ஆண்டவன் சன்னதியில் பொய் சத்தியம் செய்பவர்களின் குடும்பத்தின் தலைமுறையும் பூண்டற்று போய்விடும். தனக்கு ஓர் துயர் நேர்ந்துவிட்டது என்று கண்ணீருடன் எந்த அப்பாவியும் முறையிட்டால் சுடலை சும்மா விடமாட்டார் என்பது வெறும் கதையல்ல ரத்தவரிகளால் எழுதப்பட்ட சரித்திரமாக இன்றும் நிலைத்து நிற்கிறது. சுடலை ஆண்டவருக்கு ஜாதி பேதமின்றி யார் வேண்டு மென்றாலும் பூஜை செய்யலாம். அந்தணர்கள் உட்பட அனைத்து ஜாதியிலும் பூசாரிகள் உண்டு. பொதுவாக சுடலை நயவஞ்சகரை அழிப்பவராகவும் பொய் சத்யவாதியை வதைப்பவராகவும். தீய மந்திர சக்திகளை ஒழிப்பவராகவும் இருக்கிறார், பல எதிரிகளுக்கு ஆட்பட்டு வாழ்க்கையில் துயரப்படுபவர்கள் சுடலையை வணங்கினால் சத்ருகள் நாசமடைந்து சந்தோஷமான வாழ்வை பெறுவார்கள்.

Wednesday, November 17, 2010

Certificate of Participation

சிறந்த 300+ க்கும் அதிகமான இலவச சாப்ட்வேர்கள் ஒரே இடத்தில்

தற்போது உள்ள நிலையை பார்த்தால் நீங்கள் பணம் கொடுத்து எந்த   மென்பொருட்களையும் வாங்க தேவையில்லை என்றே கூறலாம். அத்தனையும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்து விட்டது. இருந்தாலும் நாம் ஒவ்வொரு இலவச மென்பொருட்களை பெறவும் நாம் கூகுளிலோ அல்லது வேறு ஏதாவது சர்ச் என்ஜின் பயன் படுத்தி தேடிபிடிப்போம். அது மட்டுமில்லால் நாம் அந்த தளத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே தரவிறக்க முடிகின்ற வகையில் ஒரு சில தளங்கள் இருக்கும். இதனால் தேவையில்லாமல் நம் நேரம் தான் விரயம் ஆகும். இந்த குறைகளை போக்குவதற்காகவே ஒரு தளம் உள்ளது. இதில் நீங்கள் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அத்தனையுமே இலவசம். இதில் சுமார் முன்னூறுக்கு அதிகமான மென்பொருட்கள் உள்ளது. அது மட்டுமில்லாமல் தினம் தினம் ஒரு புதிய மென்பொருட்களை கொடுத்து கொண்டே இருப்பார்கள்.


TOP 300 Freeware software!

  • OFFICE
  • ARCHIVE MANAGEMENT
  • INTERNET
  • P2P
  • CHAT
  • SECURITY
  • NETWORK
  • SERVERS
  • AUDIO
  • VIDEO
  • IMAGE
  • 3D
  • DEVELOPERS
  • CD/DVD
  • CODECS
  • SYSTEM UTILITIES
  • UI ENHANCEMENTS
  • HARDWARE MONITORING
  • GAMES
  • EDUCATION
  • MISCELLANEOUS

என்று பல பிரிவுகளில் மென்பொருட்களை கொடுத்து உள்ளார்கள். (என்னடா இவன் இவ்வளவு கதை பேசிட்டு கடைசிவரை அந்த தளத்தின் முகவரியை தரமாட்டேன்கிறான் என்கிறீர்களா). இந்த தளத்திருக்கு இந்த லிங்கை http://www.winaddons.com/top-300-freeware-software/ க்ளிக் செய்யவும். இனி நம் கணினிக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் தேடி அலைய வேண்டியதில்லை அனைத்தும் ஒரே இடத்தில்.

உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க

இணையத்தில் இமெயில் இலவசமாக கிடைக்கின்ற ஒரு வசதியாகும். யார் எத்தனை மெயில் ஐடி வேண்டும் என்றாலும் வைத்துகொள்ளலாம் அதற்கு எந்த அளவும் கிடையாது. பதிவர்களும் ஒன்றிற்கு மேற்ப்பட்ட ஈமெயில் ஐடி வைத்து இருப்பார்கள். நாம் நிறைய தளங்களில் பார்த்து இருப்போம் contact என்று போட்டு விட்டு அதற்கு அருகிலேயே அவர்கள் ஈமெயிலுடன் கூடிய படம் ஒன்று இருக்கும். அது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். அதை எப்படி உருவாக்குவது என்று இங்கே பார்ப்போம்.

கீழே சில மாதிரிகளை கொடுத்துள்ளேன் பார்க்கவும்.




  • என்ன அழகாக உள்ளதா இதை நம் தளத்தில் பொருத்தினால் இன்னும் அழகாக இருக்கும் அல்லவா.
  • அதற்கு இந்த லிங்கில் Email Logo செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் முதல் கட்டத்தில் உங்கள் மெயில் ஐடியை கொடுத்துவிடவும். 
  • இரண்டாவது கட்டத்தில் உங்களுக்கு மெயில் சேவை தரும் நிறுவனத்தை தேர்வு செய்யவும்(இதில் சுமார் 25 மெயில் நிறுவனங்களின் பட்டியல் இருக்கும்).
  • அடுத்து கீழே உள்ள Generate என்ற பட்டனை அழுத்தவும்.
  • உங்கள் மெயில் ஐடியுடன் கூடிய லோகோ உங்களுக்கு வரும்.

  • மேலே படத்தில் காட்டியுள்ளதை போல் உங்கள் லோகோ மீது கர்சரை வைத்து வலது கிளிக் செய்து உங்கள் லோகோவை தரவிறக்கி கொள்ளுங்கள்.
  • இப்பொழுது உங்கள் மெயிலுடன் கூடிய லோகோ உங்களுக்கு வந்துவிட்டது.
பிளாக்கில் உபயோகிக்கும் முறை 
  • இதற்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்பு 
  • Design- Add a Gadget - Html/ JavaScript -சென்று கீழே உள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
<a href="mailto:YOUR EMAIL ID"><img src="EMAIL LOGO URL" /></a>
  • YOUR EMAIL ID - உங்களுடைய இமெயில் ஐடியை கொடுக்கவும்.
  • EMAIL LOGO URL - என்ற இடத்தில் நீங்கள் உருவாக்கிய இமெயில் லோகோவின் URL கொடுக்கவும். 
  • உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.
  • முடிவில் கீழே உள்ள SAVE என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்கள் தளத்தில் நீங்கள் தேர்வு செய்த லோகோவுடன் உங்கள் தளத்தில் வந்திருக்கும்.
  • உங்கள் வாசகர்களும் உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.

எந்த வகை வீடியோவையும் எந்த வகைக்கும் எளிதாக மாற்றலாம்

வீடியோக்கள் பல வகையில்  இணையத்தில் கிடக்கின்றன இதில் நமக்கு தேவையான வீடியோக்களை நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்கிறோம். ஒரு சிலவகையான வீடியோக்கள் நம் கணினியில் இயங்காத பார்மட்டில் இருக்கும் மற்றும் இந்த வீடியோக்களை நம் மொபைல் போனுக்கு காப்பி செய்ய நினைத்தாலோ இந்த வகை வீடியோக்களை நாம் வேறு பார்மட்டில் மாற்ற நினைப்போம்.
இதை வசதியை தர இணையத்தில் நிறைய மென்பொருட்கள் இருந்தாலும் Hamster Free Vedio Convertor என்ற மென்பொருள் சிறப்பாக உள்ளது.
மென்பொருளின் பயன்கள்:
  • இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
  • இதில் எந்த வீடியோவையும் ipod,ipad, Iphone, PS3, PSP, Black Berry, Xbox, zune, Apple TV, iRiver இப்படி 200 வகையான சாதனங்களில் உபயோகிக்கும் படி மாற்றி கொள்ளலாம்.
  • எந்த வீடியோவையும் 3GP, MP3, MP4, AVI, DVD, WMV, DIVIX, MPEG, FLV, M2TS இப்படி எந்த வகை பார்மட்களிலும் எளிதாக மாற்றி கொள்ளலாம்.
  • வீடியோவில் வுள்ள பாடலையோ அல்லது வேறு ஏதேனும் ஆடியோவையோ தனியாக பிரித்து கொள்ளலாம்.
  • உபயோகிப்பதற்கு மிகவும் சுலபம்.
  • WINDOWS7/ VISTA / XP - க்கு உகந்தது.
  • இந்த மென்பொருளை உங்கள் விருப்பம் போல் தீம் மாற்றி அழகாக்கி கொள்ளலாம்.
  • 40 வகையான மொழிகளுக்கு உகந்தது.
உபயோக்கிக்கும் முறை: 
  • கீழே உள்ள DOWNLOAD பட்டனை அழுத்தி இந்த  மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு வரும் ZIP பைலை EXTRACT செய்து உங்கள் கணினியில் Hamster vedio convertor மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் முதல் படியில் உள்ள Add file என்பதில் நீங்கள் கன்வெர்ட் செய்ய வேண்டிய வீடியோ பைலை ட்ராக் செய்தோ அல்லது அந்த கட்டத்தில் க்ளிக் செய்தோ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்து  Edit க்ளிக் செய்து கொண்டு அங்கு நீங்கள் மாற்ற வேண்டிய பார்மட்டை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • இந்த படியில் நீங்கள் உங்கள் வீடியோவின் height width மற்றும் quality போன்றவைகளை உங்கள் விருப்பம் போல் மாற்றி கொள்ளலாம்.
  • முடிவில் நீங்கள் க்ளிக் செய்ய வேண்டியது Convert பட்டனை. இந்த பட்டனை அழுத்தியவுடன் உங்கள் வீடியோவின் அளவை பொருத்து உங்கள் வீடியோ கான்வர்ட் ஆகி வரும்.  
  • இது போன்று உங்களுக்கு தேவையான வீடியோக்களை தேவையான வடிவில் மாற்றி கொள்ளலாம். 
  • இதில் உள்ள செட்டிங்க்ஸ் க்ளிக் செய்து உங்கள் மொழி மற்றும் மென்பொருளின் நிறத்தை மாற்றி கொள்ளலாம்.

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்.


தரம் குறையாமல் படங்களின் அளவை குறைக்க யாகூ நிறுவனத்தின் Smush It

ஒரு படம் என்பது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்கிறார்கள் வல்லுனர்கள். நாம் எழுத்தில் புரிய வைக்க முடியாததை ஒரு படத்தை காட்டினால் மற்றவர்களுக்கு எளிதாக புரிந்து விடுகிறது அது மட்டுமல்லாது ஏதேனும் நிகழ்வை சுட்டிக்காட்டவோ அல்லது நம் பதிவை அழகாக மாற்றவோ நாம் பதிவிற்கு சம்பந்தமான சில படங்களை சேர்ப்போம்.
அப்படி நாம் படங்களை சேர்ப்பதனால் நம் பதிவுகள் திறக்க அதிக நேரம் எடுக்கிறது. மற்றும் நம் கணினியில் வைத்திருந்தாலும் படங்கள் அவற்றின் அளவிற்கு ஏற்ப நம் கணினியின் கொள்ளளவை நிரப்புகின்றன. ஆகையால் இந்த படங்களின் அளவை எப்படி குறைப்பது அதுவும் தரத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல்.

பயன்கள்:
  • நம் பதிவுகள் திறக்க அதிக நேரம் எடுத்து கொள்ளாது.
  • நம் கணினியில் அதிக இடத்தை பெற்று கொள்ளாது.
  • நம் படத்தின் தரம் எந்த விதத்திலும் குறையாது.
  • நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை.
  • ஒன்றிற்கு மேற்ப்பட்ட படங்களை ஒரே நேரத்தில் மாற்றும் வசதி.
  • இந்த தளம் சென்ற வுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  •  இதில் படத்தில் காட்டியிருப்பதை போல் UPLOADER என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதில் Select files to Smush என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • நீங்கள் அளவை குறைக்க வேண்டிய அனைத்து படங்களையும் தேர்வு செய்து open கொடுக்கவும்.
  • அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த அனைத்து படங்களும் அளவு குறைந்து ஆனால் அதே தரத்தோடு வந்திருக்கும்.
  • உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும் அதில் நீங்கள் smush செய்த படங்கள் தெரியும்.
  • Savings என்ற இடத்தில் உங்கள் படத்தில் குறைக்க பட்ட அளவு காட்டப்படும்.
  • Sumsh செய்த படங்களை தரவிறக்க மேலே உள்ள Download Smushed Images என்ற பட்டனை க்ளிக் செய்தால் உங்கள் படங்கள் அனைத்தும் ஒரே Zip கோப்பில் உங்கள் கணினியில் சேமிக்க படும்.
  • நீங்கள் இணையத்தில் இருக்கும் படத்தையும் அளவை குறைக்கலாம். இதற்கு அருகில் உள்ள URL என்ற பட்டனை அழுத்தவும்.
  • இது போல் விண்டோ வந்ததும் உங்கள் படத்தின் URL இங்கு கொடுக்கவும்.
  • ஒவ்வொரு படத்தின் URL தனிதனி வரியில் கொடுக்கவும். அடுத்து கீழே உள்ள Smush pattanai அழுத்தினால் உங்கள் படம் தயாராகிவிட்டது.
  • நீங்கள் தரவிறக்கி கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு செல்ல இந்த லிங்கில் Smush It செல்லவும்.

சுலபமாக வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் டவுன்லோட் செய்ய

இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் கொட்டிக்கிடக்கிறது. இதில் பிரபலமான தளங்கள் youtube, Daily motion, Metacafe போன்ற தளங்கள் ஆகும். இந்த வீடியோக்களை எப்படி டவுன்லோட் செய்வது என்று நாம் முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த வீடியோக்களில் இருந்து ஆடியோவை மட்டும் எப்படி டவுன்லோட் செய்வது என்று இங்கு காணலாம். இதற்கு ஒரு இணைய தளம் உள்ளது இதில் நம் கணினியில் சேமிக்க பட்டிருக்கும் வீடியோவில் இருந்து கூட ஆடியோவை பிரித்தெடுத்து கொள்ளலாம்.

  • இந்த வேலையை நமக்கு சுலமாக செய்ய இந்த தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த லிங்கில் Audio from Vedio க்ளிக் செய்யவும். கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • மேலே உள்ள கட்டத்தில் உங்களின் வீடியோவின் URL கொடுக்கவும்.
  • I accept க்ளிக் செய்து அடுத்துள்ள Next என்ற பட்டனை க்ளிக் செய்யவும். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • சிறிது நேரம் காத்திருக்கவும்.உங்களுடைய வீடியோ கன்வெர்ட் ஆகி mp3 பைலாக உங்கள் கணினியில் சேமிக்க படும். 
  • மேற்கூறிய முறையில் இணையத்தில் உள்ள வீடியோக்களில் இருந்து ஆடியோவை பிரித்தெடுக்கும் முறை.
  •  ஆனால் நம் கணினியில் உள்ள வீடியோவில் இருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இந்த தளத்தில் சென்று அருகில் உள்ள Convert by Upload என்ற பட்டனை அழுத்தி உங்கள் வீடியோவை தேர்ந்தெடுத்து Next பட்டனை அழுத்திவிடவும்.
  • மேலே படத்தில் உள்ளது போல் நீங்கள் செய்து உங்கள் கணினியில் சேமித்திருக்கும் வீடியோவில் இருந்த ஆடியோவை மட்டும் பிரித்தெடுக்கலாம்.

முப்பரிமான (3D ) ல் இணையத்தை பயன்படுத்த 3D Browser இலவச பயன்பாட்டிற்கு .

             3D பற்றி யாருக்கும் சொல்லத்தேவை இல்லை மேலே உள்ள படத்தை போல பார்க்கும்படி இருந்தால் அது 3D என சுருக்கமாக சொல்லலாம் .

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் IE ,Firefox போன்ற Browser கள் 2D வடிவில் வழி பக்கங்களை காட்டுகின்றன. 3D browser கள் மூலம்  நமது வலைபக்கங்களை பார்க்கும் போது ஓரளவுக்கு மட்டுமே முப்பரிமான உணர்வு கிடைக்கும் , On line Shopping , Gaming போன்ற தளங்களில் இதன் பயன்பாடு அதிகம்.youtube போன்ற தளங்களில் வித்தியாசம் தெரியும் .இந்த பதிவை 3D browser இல் தான் பதிவிடுகிறேன் ஒரு புதுமையான அனுபவமாக உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை  .

பல நிறுவனங்கள் இந்த 3D Browser வசதியை வழங்கினாலும் அவை பெரும்பாலும் இலவசமாக கிடைப்பதில்லை . Browse3D என்ற இணையதளம் SpaceTime3D என்ற இலவச Browser இலவசமாக வழங்குகிறது .

முப்பரிமான வசதியுடன் இதில் பல கூடுதல்  அம்சங்கள் உள்ளன   Navigation Button - இதன் வலைபக்கத்தை மேலும் கீழும் இடம் வலம் மாற்ற இயலும் , ஒருபக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு ஒரே Tab ல் செல்லமுடியும் .

Screenshot Button- பக்கத்தை Screenshot செய்ய முடியும் .

இன்னும் print ,print preview வசதிகளும் உள்ளன .Screenshot எடுக்கப்பட்ட .இந்த படத்தை பாருங்கள்

இதில் open New Window, New Tab option கள் இல்லை , ஏனென்றால் ஒரே பக்கத்தில் ஒன்றிற்கு மேற்ப்பட்ட பக்கங்களை ஒரே Tab ல் பார்க்கலாம், தேவையானதை தேர்ந்தெடுக்கலாம் .

இது சிறப்பான ஒரு3D Browser என்பதில் சந்தேகமே இல்லை . இதற்கென  அதிக நேரமும் எடுத்துக்கொள்வதில்லை என்பது கூடுதல் சிறப்பு
உபயோகித்து பாருங்கள் நீங்களும் உணர்வீர்கள் . 
இதனை Download செய்ய Click Here

கணிணி பாதுகாப்பு வழிகள்


1. automatic update:
                    பெரும்பாலானோர் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இதில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளை Batch File என்ற வகையில் தருகிறது. மாதம் ஒருமுறை தரப்படும் இந்த பேட்ச் பைல்களை நம் கம்ப்யூட்டர்கள் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில் தாமாகப் பெற்று அப்டேட் செய்திடும் வகையில் நம் சிஸ்டத்தில் செட் அப் செய்து கொள்ளுங்கள் .ஒரிஜினல் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் இது பொருந்தும்,.
2.Best Anti-virus:
                        இன்டர்நெட் மூலம் தான் பல வைரஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஏறத்தாழ ஒருநாளைக்கு 500 புதிய வைரஸ்கள் ,விபரங்களுக்கு இங்கே சென்று பாருங்கள் மாதந்தோறும் உருவாகும் புதிய வைரஸ் விபரங்களை எந்த நாடு என கொடுத்துள்ளனர் New viral list monthly எனவே இதனைக் கண்டறிந்து தடுக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லை எனில் புதிதாய் வரும் வைரஸ்கள் பாதித்துவிடும் .
3.Anti-Spiware:
                 ஏதேனும் ஒரு வழியில், இமெயில் அல்லது டவுண்லோட் ஆகும் புரோகிராம் போன்றவற்றின் மூலம், பல ஸ்பைவேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து, நம் சிஸ்டத்தில் உள்ள நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அடுத்தவருக்கு அனுப்புகின்றன. எனவே ஒன்று அல்லது இரண்டு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து இயக்க வேண்டும். பொதுவாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட், விஸ்டாவுடன் விண்டோஸ் டிபன்டர் மற்றும் ஸ்பை ஸ்வீப்பர் புரோகிராம்களைத் தருகிறது.
4.Firewall:
                   நம் கம்ப்யூட்டருக்குள் வரும் spyware புரோகிராம்களைத் தடுக்கும் ஒரு வழி பயர்வால் ஆகும். நம் கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டால் அதிலிருந்தும் இது போன்ற புரோகிராம்களைச் செல்ல விடாமல் firewall தடுக்கிறது. எனவே இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். விஸ்டாவுடன் இதுவும் தரப்படுகிறது. Zone Alarm போன்ற இலவசமாகக் கிடைக்கும் பயர்வால்களையும் பயன்படுத்தலாம்.

               5. பயர்வால் புரோகிராம் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் கஷ்டம்தான் . அதே போல்தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும். இவை இரண்டு வைத்துக் கொண்டாலும் ஒரு முறை ஒன்றைப் வைத்துக்கொள்ளுங்கள்.
6. Password :
                     நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் அடுத்தவர்கள் எளிதில் கண்டுபிடித்திடும் வகையில் இருக்கக் கூடாது. எண்களும் எழுத்துக்களும் (Alphanumeric )கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். நீளமாக இருந்தால் நல்லதுதான். அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க http://passwordbird.com என்ற தளத்தை பயன்படுத்தலாம் .
                 7. எந்த பாஸ்வேர்டையும் எந்த நேரமும் மாற்றக் கூடிய வசதியினை இன்டர்நெட்டில் உள்ள தளங்கள் தருகின்றன. எனவே பாஸ்வேர்டை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

                    8. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.

                9. ஒரு new பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.  
                        10. பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.
                     11. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் எப்பவும் தொல்லை தான்.

                      12. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு இருப்பதால் பிறர் பயன்படுத்த வாய்ப்பு உண்டு.
                 13. பொதுவான public கம்ப்யூட்டர்  மூலம் நீங்கள் browsing செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளியேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை save  செய்து வைக்காதீர்கள்.
 
14. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே ஆகிறதா ? அவற்றை நிரந்தரமாக நிறுத்திவிடுங்கள் . ஆட்டோ ரன் எளிதாக நிறுத்திவிடலாம். ஆட்டோ பிளே நிறுத்த ட்வீக் யு.ஐ. (Tweak UI) பயன்படுத்தலாம்.

15. விண்டோஸ், தான் இயங்கும் போது பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் பாருங்கள் . தேவையற்றது அல்லது நீங்கள் அறியாதது என்று இருப்பின் அதனை நிறுத்தலாம். அதனால் கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு பிரச்சினை இல்லை என்றால் நீக்கி வைக்கலாம்.
                16. உங்களுக்கு வந்துள்ள இமெயில் செய்திகளில் ஏதேனும் லிங்க் கொடுத்து அவற்றைக் கிளிக் செய்திட உங்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறதா? அவசரப்பட்டு உடனே கிளிக் செய்திட வேண்டாம். அனுப்பியவர் நம்பிக்கைக்குரியவர் என்றாலே கிளிக் செய்திடவும்.

17. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும்.

18. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன் படுத்துங்கள். வேகமாகவும் இயங்குபவை இவைதான்.


19 ..ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க இது உதவுகிறது.
20. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகிறீர் களா? அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’என S சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.

              21. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail.com போன்ற தளங்களை  பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.

22. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.
23. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.
                  24. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர்பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 ஆகியவை மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது.

25 .முடிந்தவரை unix OS  பயன்படுத்தினால் மேற்கூறிய பெரும்பாலான பிரச்சினைகளை மறந்துவிடலாம் . Windows பயன்படுத்துபவர்கள் Antivirus நிறுவியிருந்தாலும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.
.
 
Related Posts Plugin for WordPress, Blogger...